சிரியாவின் 3 நகரங்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை இலக்கு வைக்கும் யு.எஸ், அரபு நாடுகள்!
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள ரக்கா உள்ள 3 முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் 5 அரபு நாடுகள் கூட்டாக சராமரி வான் தாக்குதல்களை நடத்தின. இதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கிலும் சிரியாவிலும் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்துள்ளனர். இதன் தலைநகராக சிரியாவின் அல் ரக்கா நகரம் செயல்பட்டு வருகிறது.
ஈராக், சிரியாவைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தாக்கப் போவதாகவும் ஐ.எஸ். இயக்கம் மிரட்டி வந்தது. ஐ.எஸ். இயக்கத்தின் விஸ்வரூப வளர்ச்சியான அரபு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இதனால் அமெரிக்கா தலைமையில் அரபு நாடுகள் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முடிவு எடுத்தன. இந்த தாக்குதல் பற்றிய செய்தித் தொகுப்பு:
- அமெரிக்காவுடன் பக்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டன.
- ஏவுகணைகளாலும் ராக்கெட் குண்டுகளாலும் முதன் முதலில் அல் ரக்கா நகரம் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது.
- அமெரிக்காவின் அதி நவீன எப்-22 போர் விமானம் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது.
- பெர்சிய வளைகுடா மற்றும் செங்கடல் பகுதியில் இருந்து இலக்குகளை குறிவைத்து தாக்கின.
- செங்கடலில் நிறுத்தப்பட்டு அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து நாசகார டொமாஹவ் ஏவுகணைகள் வீசப்பட்டன.
- பெர்சிய வளைகுடாவில் இருந்து எப்-18 போர் விமானங்கள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.
- இதேபோல் எப்16 ரக போர் விமானமும் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது.
- அல் ரக்கா நகரம் மீது சுமார் 90 நிமிடங்கள் இடைவிடாத தாக்குதல் நடத்தப்பட்டது.
- மொத்தம் 50 நிலைகள் மீது இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இத்தாக்குதல்களில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
- அமெரிக்கா தலைமையிலான உக்கிர தாக்குதல் தொடங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள், தாக்குதலை நிறுத்தாவிட்டால் இங்கிலாந்து நாட்டு பிணைக் கைதியின் தலையை துண்டிப்போம் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
- அல்ரக்காவைத் தொடர்ந்து சிரியாவின் வடபகுதியில் உள்ள டியர் அல் ஜோர் மாகாணத்திலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- அல்கொய்தாவின் மற்றொரு தீவிரவாத அமைப்பான அல் நுஸ்ராவின் கை ஓங்கி இருக்கும் அலெப்போ மற்றும் இட்லிப் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
- இந்த தாக்குதல்களை மேற்கொள்ளப் போவதாக சிரியாவுக்கான ஐ.நா. தூதரிடம் அமெரிக்கா தெரிவித்திருந்ததாகவும் ஆனால் எங்களது ஒப்புதலைக் கோரவில்லை என்றும் அதிபர் ஆசாத் அரசு தெரிவித்துள்ளது.
- இதனிடையே சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களில் 'நேட்டோ' படைகள் பங்கேற்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்குலக நாடுகள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதைத் தடுக்கவே இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.