அப்பாவுடன் சண்டை.. அம்மாவின் நினைவு நாளுக்குக் கூட வராத பெனாசிர் மகன்!
லாகூர் -கராச்சி: மறைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனா்சிர் பூட்டோவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவரது மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ கலந்து கொள்ளவில்லை.
நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக அவர் பாகிஸ்தானுக்கே வரவில்லை. இதன் மூலம் அவருக்கும், அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரிக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோபமாக இருக்கும் தனது மகனை சாந்தப்படுத்தி அழைத்து வருவதற்காக சர்தாரி லண்டன் சென்றிருந்தார். ஆனால் அவரால் பிலாவலை அமைதிப்படுத்த முடியவில்லையாம். இதனால் பிலாவல் பாகிஸ்தான் வரவில்லை.
இந்த பின்னணியில் சிந்து மாகாணத்தில் உள்ள கர்ஹி குடா பக்ஷ் என்ற இடத்தில் பெனாசிரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று மட்டும் அல்ல, கடந்த 2007ம் ஆண்டு பெனாசிர் படுகொலை செய்யப்பட்டது முதலே அவரது நினைவு நாள் நிகழ்ச்சியில் பிலாவல் கலந்து கொண்டதில்லை. அந்தசமயத்தில் அவர் பாகிஸ்தானிலேயே இருப்பதில்லை.
கட்சி விவகாரம் தொடர்பாக பிலாவலுக்கும், சர்தாரிக்கும் இடையே செம சண்டை நடந்து வருகிறது. தனது தந்தையை கலந்து ஆலோசிக்காமலேயே தனது ஆலோகர்களாக ஜெகாங்கீர் பாதர் மற்றும் பஷீர் ரியாஸ் ஆ்கியோரை நியமித்தது சர்தாரியைக் கோபப்படுத்தி விட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
இதுபோன்ற நியமனங்களை தான் தடுக்கவில்லை என்றாலும் கூட ஒரு முழுமையான தலைவராக இன்னும் பிலாவல் வளரவில்லை. அதுவரை அவர் சற்று கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறுகிறாராம் சர்தாரி.