என்னம்மா இப்டி பண்ணீட்டிங்களேம்மா.. 1 கோடி ரூபாய் கம்யூட்டரை குப்பையில் போட்ட பெண்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு கோடி ரூபாய் கம்யூட்டரைக் குப்பையில் போட பெண்ணை, கடைக்காரர் தேடி வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்காவின் சிலிகான் வேலியில் உள்ள மறுசுழற்சி கடைக்கு பெண் ஒருவர் தனது இறந்து போன கணவரின் பொருட்களை கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்றுள்ளார். அப்பெண் விற்ற பெட்டி ஒன்றில் பழைய கால கம்யூட்டர் ஒன்று இருந்தது.
அது மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் அவரது சகாக்கள் 1976-ல் உருவாக்கிய முதல் தலைமுறையை சேர்ந்த 200 கணினிகளில் ஒன்று எனத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்தக் கம்யூட்டரை சுமார் 2 லட்சம் டாலருக்கு கடைக்காரர் விற்றார். இந்திய மதிப்பில் இது சுமார் ஒரு கோடி ரூபாய்களுக்கு மேல் ஆகும்.
அமெரிக்க மறுசுழற்சி கடையின் கொள்கைப்படி இதுபோன்று விற்ற பொருளின் பாதி மதிப்பை பொருளின் சொந்தக்காரருக்கு கொடுத்து விட வேண்டும். ஆனால், இந்த விலையுயர்ந்த கம்யூட்டரை எடைக்குப் போட்ட அந்தப் பெண்ணின் விபரங்கள் ஏதும் கடைக்காரரிடம் இல்லை. எனவே, அப்பெண்மணியை அவர் தேடி வருகிறார்.
இறந்துபோன கணவனின் கணினி என்பதால் அதை எடைக்கு போட்ட பெண்ணிற்கு அதன் மதிப்பு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.