ரகுராம் ராஜன் மீதான சு.சுவாமி விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கடும் எதிர்ப்பு!
டோக்கியோ: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீதான பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்து வரும் விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரிசர் வங்கியும் அதன் ஆளுநரும் இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான நிறுவனங்கள் என்றும் அருண்ஜேட்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். அவரது பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் முடிகிறது.
ரகுராம் ராஜனின் நடவடிக்கைகளை பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்திய பொருளாதாரத்தையே சீர்குலைக்கிறார் ரகுராம் ராஜன்; அவர் மனதளவில் இந்தியராக இல்லை என விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. ரகுராம் ராஜனை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு 2 கடிதங்களையும் சுப்பிரமணியன் சுவாமி அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ரகுராம் ராஜன் மீதான விமர்சனங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள நிதி அமைச்சர் அருண்ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விமர்சனம் என்பது கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் மீது தான் இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களின் மீது இருக்கக் கூடாது. ரகுராம் ராஜன் மீதான தனிபட்ட எந்த ஒரு விமர்சனத்தையும், யாரிடம் இருந்து வருவதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏனெனில் ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஆளுநரும் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய நிறுவனம் என்றார்.