மொசூல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிப்பு.. இந்திய பணய கைதிகள் 39பேர் நிலை என்ன?
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டுள்ள நிலையில், இந்திய பணயக் கைதிகள் 39 பேர் கதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல், ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிககள், ஈராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். ஈராக்கின் முக்கிய நகரான மொசூல் நகரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
ஈராக் ராணுவம் இந்த நகரை மீட்க கடுமையாக போராடி வந்தது. இந்த நிலையில் மொசூல் நகரை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி, நேற்று அறிவித்தார்.
அதேநேரம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடந்த 2014ம் ஆண்டு கடத்தப்பட்ட 34 இந்தியர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த 39 பேரும் கட்டுமான தொழிலாளர்களாகும். கடத்தப்பட்ட மேலும் ஒரு இந்தியரான ஹர்ஜித் மஷித் மட்டும் எப்படியோ தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பியோடிவந்தார். அவர் அளித்த பேட்டியின்போது, 39 இந்திய தொழிலாளர்களையும் வரிசையாக வைத்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தெரிவித்தார். இதனால் 39 தொழிலாளர்கள் குடும்பங்களிலும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறையோ, அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என மறுப்பு தெரிவித்தது.
கடந்த மாதம் கூட வெளியுறவுத்துறை இதே கருத்தை கூறியது. ஆனால், மொசூல் நகர் மீட்கப்பட்ட நிலையிலும், இந்தியர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. அந்த தொழிலாளர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த தகவல்களை இந்திய அரசு சேகரித்து வெளியிட தொழிலாளர்கள் குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.