மன கவலை தீர 'ஆடு' யோகா! அமெரிக்காவில் இப்போ இதுதான் டிரெண்ட்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் பிரசித்தி பெற்று வரும் ஆடு யோகாவினால் பயிற்சிக்கு வரும் போது மனகவலை தீருவதாக நம்புகின்றனர்.
யோகா, தியானம் என்றாலே உடலுக்கும், மனதுக்கும் நன்மையை ஏற்படுத்துகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றை பயின்றால் உடல் உபாதை நீங்குகிறது என்பது அறிவியல் பூர்வமாக கூறப்படும் உண்மையாகும்.
இதற்காக தனி பயிற்சி வகுப்புகள் நடத்தி யோக கலையை பயிற்றுவிக்கின்றனர். இதில் ஒவ்வொருவர் ஒரு உத்தியை கையாள்கின்றனர். மேலும் தியானம் செய்வதால் மன அமைதி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆடு யோகா
யோகா செய்து கொண்டே தியானம் செய்த பலனை அடைய வேண்டுமா. அப்படியென்றால் கோட் (ஆடு) யோகா செய்ய வேண்டும். ஆடு யோகா என்பது நாம் செய்யும் ஆசனம் அல்ல. நம் மீது ஆட்டுக்குட்டி ஏறி துள்ளி விளையாடுவது ஆகும்.
அமெரிக்காவில் பிரபலம்
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில்தான் இந்த ஆடு யோகா பிரபலமாகி வருகிறது. புகைப்படக்காரராக இருந்து வந்த லெய்னி மோர்ஸ் என்பவர் உடல் நல கோளாறு காரணமாக வேலையை விட்டு பண்ணை ஒன்றை வாங்கினார். இந்த இடத்தைப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வந்தார்.
யோகா மாஸ்டருடன்...
யோகா மாஸ்டர் ஒருவருடன் இணைந்து சுத்தமான காற்றும் பசுமையான தோட்டமுமாக இருக்கும் பண்ணையில் யோகா வகுப்பை தொடங்கினார். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு ஆடுகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இங்கு வைக்கோல் போர்த்தப்பட்ட தரையில் இயற்கையான கட்டமைப்பில் யோகா செய்கின்றனர். அவர்களை சுற்றி ஏராளமான ஆட்டுக் குட்டிகள் அங்கு இங்கும் ஓடுகின்றன.
முதுகில் சவாரி
இந்த ஆட்டுக்குட்டிகள் படுத்தபடி யோகா செய்வோரின் மீது ஏறுவதாலும், அவர்களின் முடிகளை கடித்து விளையாடுவதாலும், செல்லபிள்ளை போல் முகத்தை நாக்கால் துழவி விளையாடுவதால் மனதுக்கு அமைதியை தருகின்றன. எத்தனை கவலைகள் இருந்தாலும் இவை துள்ளிக் குதித்து நம் மீது விளையாடுவதால் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக கூறுகின்றனர் இங்கு யோகா செய்பவர்கள்.
பழகிவிட்டது
முதலில் சீரியஸாக யோகா செய்யும் போதும், கோப்ரா போஸ் செய்யும் போதும் ஆட்டுக்குட்டி ஒன்று முதுகில் ஏறி உட்கார்ந்தவுடன் படபடப்பு ஏற்பட்டது. பின்னர் அவை குழந்தைகள் போல் துள்ளிக் குதித்து விளையாடுவதை பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது,. அதோடு நம் உடலையும் இதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்கிறார் அடோனா எப்பிராஹிமி என்ற பெண். மனது சந்தேஷமாக இருந்து, யோகா செய்தால் நோய் ஏன் வருகிறது.