ஈரான் விவகாரம்.... செளதி, இஸ்ரேல் செல்கிறார் யு.எஸ். பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டர்
வாஷிங்டன்: ஈரானுடன் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டர் விரைவில் இஸ்ரேல் மற்றும் செளதி அரேபியா செல்ல உள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு ஆதரவு அமெரிக்கா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இஸ்ரேல் அணுசக்தித் துறை அமைச்சர் யுவல் ஸ்டெயினிட்ஜ், மத்திய கிழக்கு நாடுகளில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது என விமர்சித்துள்ளார். மேலும் ஈரானுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதால் அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக ஆயுத உதவியை இஸ்ரேல் கோரும். இஸ்ரேல் தம்மை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் செளதி மன்னர் சல்மானுடன் அமெரிக்கா அதிபர் ஒபாமா திடீரென நேற்று தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது ஈரான் ஒப்பந்தம், ஏமன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதனிடையே செளதி அரேபியாவுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டர் செல்ல இருப்பதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இஸ்ரேலுக்கும் இந்த வாரம் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் ரைஸ் கூறியுள்ளார்.
இந்த பயணத்தின் போது ஈரான் ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.