தப்பான இடத்தில் துப்பாக்கியை வைத்து தவிப்புக்குள்ளாகும் அமெரிக்கர்கள்!
நி்யூயார்க்: அமெரிக்கர்களுக்கு எப்படியெல்லாம் சிக்கல் வருகிறது பாருங்கள். அங்கு துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகம். ஆளாளுக்கு துப்பாக்கியுடன் திரிவது அங்கு சகஜமானது. ஆனால் இதனால் எதிர்பாராத சில புதிய விபரீதங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டி வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து அமெரிக்கர்கள், பேன்ட் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தபோது, வைத்தபோது எதிர்பாராதவிதமாக அது சுட்டு தங்களது ஆணுறுப்பை இழந்துள்ளனராம்.
இப்படிப்பட்ட விபத்துகள் அதிகரிப்பது ஆண்களுக்கும், அரசு நிர்வாகத்தினுக்கும், மருத்துவர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாம்.
கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,18 வயதான மைக்கேல் ஸ்மெர்க்ளியோ என்ற வாலிபர் தனது பிஸ்டலை மடியில் வைத்துத் துடைத்துக் கொண்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக சுட்டதில் அவரது ஆணுறுப்பில் குண்டு பாய்ந்து கடும் காயத்துக்குள்ளானார். புளோரிடாவில் இந்த சம்பவம் நடந்தது.
2012ம் ஆண்டு ஜூலை மாதம் ஓக்லஹோமா என்ற இடத்தில் டவரஸ் கோல்பர்ட் என்ற 36 வயது நபர், தான் வாங்கிய ஒரு கள்ளத் துப்பாக்கியை சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்தபோது அது சுட்டதில் அவரது ஆணுறுப்பு காயமடைந்தது.
2011 ஆகஸ்ட் மாதம் சான்ட்லர் என்ற இடத்தில் 27 வயதான ஜோஷுவா செடோ என்பவர் தனது காதலியுடன் கடைக்குப் போய்க் கொண்டிருந்தபோது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கி திடீரென சுட்டு ஆணுறுப்பில் பலத்த காயத்தைச் சந்தித்தார்.
2010ம் ஆண்டு மே மாதம் வாஷிங்டனில் ஒரு நபர் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி திடீரென சுட்டுக் கொண்டதில் பலத்த காயமடைந்தார்.
இதே ஆண்டு மார்ச் மாதம் கலிபோர்னியாவின் வலஜோவில் 17 வயது சிறுவன் இதேபோல சுட்டுக் கொண்டு காயமடைந்தான்.