பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கையில் வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியது இல்லை: தமிழக அரசு
குவைத்: பள்ளிகளில் உறுதி மொழி எடுக்கையில் வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியது இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குவைத்தில் வாழும் இந்தியரான பரங்கிப்பேட்டை கலீல் அகமது பாகவீ என்பவர் தமிழக அரசிடம் ஆன்லைன் மூலம் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதாவது சில அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதிமொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள / நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன? இதுதான் வழிமுறையா? என்று தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது,
மனுதாரர் சில அரசு/தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதிமொழி எடுக்கும் போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதன்படி பள்ளிக்கல்வி இயக்கமோ, அரசோ எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
மனுதாரர் குறிப்பிட்டு அந்த பள்ளியை கூறினால் சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர் மீது விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.