ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான உளவுத் தகவலை ஈரானுடன் பகிர்ந்துகொள்ள ஆஸி. ஒப்பந்தம்
சிட்னி: தெஹ்ரான்: ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் தொடர்பான உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஈரானுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார்.
ஈராக், சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை அறிவித்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக் மற்றும் குர்து மாகாண ராணுவத்தினருக்கு உதவி வருகின்றன.
இந்நிலையில் ஈரான் சென்றுள்ள ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப், அந்நாட்டு அதிபர் ஹசன் ரொஹானி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீப், தேசிய பாதுகாப்பு சபை தலைவர் அலி சம்கானி ஆகியோரை சனிக்கிழமையன்று சந்தித்துப் பேசினார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈரான் சென்ற முதலாவது ஆஸ்திரேலிய தலைவர் ஜூலி.
இந்த பயணத்தின் போது, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துள்ள ஆஸ்திரேலிய நாட்டவர் குறித்த உளவுத்துறை தகவல்களை ஈரானுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.