ஒன்றுமே கிடைக்கவில்லை: மாயமான மலேசிய விமான தேடல் கைவிடப்படக்கூடும்- ஆஸ்திரேலியா
சிட்னி: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370ஐ தேடும் பணி விரைவில் கைவிடப்படலாம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் ராடாரில் இருந்து மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசியா தெரிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
கிடைக்கவில்லை
விமானம் மாயமாகி ஓராண்டு ஆகப் போகிறது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்களோ, பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை.
பயணிகள்
விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் சீனர்கள். சீன பயணிகள் இன்னும் உயிருடன் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன ஆனது?
தனிப்பட்ட பிரச்சனையால் சிக்கித் தவித்த கேப்டன் ஜாஹரி அமது தான் தற்கொலை செய்வதற்காக விமானத்தை கடலில் விழ வைத்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. அங்கு தான் விமானம் விழுந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தேடல் பணி மே மாதம் நிறைவடையக்கூடும்.
தேடல்
விமானத் தேடலில் எதுவுமே கிடைக்காத நிலையில் தேடல் பணியை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஆலோசித்து வருகின்றன.
முடியாது
இப்படியே தேடிக் கொண்டிருக்க முடியாது. இருப்பினும் விமானத்தை தேடத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். விமானத்தை தேட 40.5 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது. இந்த செலவை சீனா மற்றும் மலேசியா ஏற்றுள்ளது. ஆனால் இனியும் தேடல் பணியை தொடர வேண்டும் எனில் சர்வதேச நாடுகளின் உதவி தேவைப்படும் என்றார் ட்ரஸ்.