5 மாதத்தில் 2 முறை சிலந்திப்பூச்சியிடம் 'அங்கேயே' கடி வாங்கிய வாலிபர்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 21 வயது வாலிபர் 5 மாதத்தில் இரண்டு முறை சிலந்திப்பூச்சியிடம் அதுவும் ஆணுறுப்பில் கடிவாங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் பணிபுரிபவர் ஜோர்டன்(21). அவர் கடந்த ஏப்ரல் மாதம் பணி நடக்கும் இடத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றபோது ரெட்பேக் எனப்படும் விஷமுள்ள சிலந்திப்பூச்சி அவரை ஆணுறுப்பில் கடித்தது.
வலியால் துடித்து அலறிய அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரெட்பேக் சிலந்திப்பூச்சி கடித்து உயிர் இழந்தவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் உள்ள கழிவறைக்கு ஜோர்டன் சென்றுள்ளார். பூச்சி ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துவிட்டு டாய்லெட் சீட்டில் உட்கார்ந்துள்ளார்.
மறுபடியும் ஆணுறுப்பில் ஏதோ கடித்ததை உணர்ந்த அவர் அலறியடித்து பார்த்தால் மீண்டும் சிலந்திப்பூச்சி. இம்முறை வலியால் துடித்த அவரை பார்த்து சக ஊழியர்கள் வருத்தப்படாமல் கிண்டல் செய்து சிரித்துள்ளனர்.
ஜோர்டன் அருகில் உள்ள பிளாக்டவுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த உலகத்திலேயே நான் தான் துரதிர்ஷ்டசாலி. இல்லை என்றால் 5 மாதத்தில் 2 முறை ஆணுறுப்பில் சிலந்தியிடம் கடி வாங்கியிருப்பேனா என கவலையுடன் தெரிவித்துள்ளார் ஜோர்டன்.