128 பேரை பலி கொண்ட பாக். டேங்கர் லாரி தீவிபத்து... விசாரணைக்கு உத்தரவு!
பாகிஸ்தானில் எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட தீவிபத்தில் 128 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் மாகாண முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கராச்சி: பாகிஸ்தானில் சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 128 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
பஹவால்பூரில் உள்ள அகமத் பூர் ஷார்கியா பகுதியில் நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி நிலைத்தடுமாறி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
அச்சமயம் லாரியில் இருந்து பெட்ரோல் சாலையில் ஓடியது. இதை கண்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என பெட்ரோலை சேகரிக்க கூட்டமாக முண்டியடித்து கொண்டு ஓடினர். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் 123 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 76 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளும் நடைபெறுகின்றன. இந்த விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் 123 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.