தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்கிறது வங்கதேசம்
டாக்கா: ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்தியாவிடம் வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது.
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் 1ம் தேதி இரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 22 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் 22 பேர்களை கொன்ற தீவிரவாதிகளில் ஒருவனான ரோகன் இம்தியாஸை, மும்பையை சேர்ந்த, பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தாக்குதலுக்கு தூண்டியதாக செய்தி வெளியாகியது. பேஸ்புக்கில் ரோகன் இம்தியாஸ், ஜாகீர் நாயக் போதனைகளை பரப்பி வவந்தது அம்பலமானது.
இன்று வங்கதேசத்தில் மீண்டும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொழுகை நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது.
வங்காளதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசானுல் ஹக், கூறுகைில் "ஜாகிர் நாயக், போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை. நாயக்கின் போதனைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து வருகிறோம்," என்று கூறியுள்ளார்.
ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஹக் கூறிஉள்ளார்.
ஜாகிர் நாயக்கிற்கு எதிராக மோடி அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், 2012ல் முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங், ஜாகீர் நாயக்குடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றதும், அவரை அமைதியின் தூதுவர் என திக்விஜய் சிங் புகழ்ந்ததும் இப்போது வீடியோவாக வெளியாகி காங்கிரசுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளது.