வங்கதேசத்தில் ஷியா முஸ்லீம் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 3 பேர் காயம்
போக்ரா: வங்கதேசத்தில் உள்ள ஷியா முஸ்லீம்களின் மசூதிக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் தொழுது கொண்டிருந்த ஒருவர் பலியானார், 3 பேர் காயம் அடைந்தனர்.
வங்கதேசத்தில் உள்ள போக்ரா மாவட்டம் ஹரிபூர் கிராமத்தில் உள்ளது ஷியா முஸ்லீம்களின் மசூதியான இமாம் கோமேனி மசூதி. வியாழக்கிழமை மாலை 20 ஆண்கள் மசூதியில் தொழுது கொண்டிருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த 3 பேர் மசூதிக்குள் புகுந்து தொழுது கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் மசூதியில் பாங்கு சொல்லும் முஅஸ்ஸம் ஹுசைன்(70) பலியானார், மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
இடுப்பில் குண்டடிபட்ட இமாம் ஷாஹினுர் இஸ்லாம்(35) கூறுகையில்,
நாங்கள் தொழுது கொண்டிருந்தபோது அவர்கள் எங்களை தாக்கினர். பலர் தரையில் படுத்துக் கொண்டனர் என்றார்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. முன்னதாக கடந்த மாதம் டாக்காவில் உள்ள ஷியா மசூதியில் கையெறி குண்டு வீசித் தாக்கப்பட்டதில் ஒருவர் பலியானார், 80 பேர் காயம் அடைந்தனர்.
அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்ற மறுநாள் ஹரிபூர் மசூதியில் தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.