ஆண்டின் கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு மட்டும் பதில் அளித்த ஒபாமா
வாஷிங்டன்: ஆண்டின் கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆண் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து பெண் நிருபர்களுக்கு மட்டும் பதில் அளித்தார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் 2014ம் ஆண்டின் கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பு வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் தன்னிடம் பெண் நிருபர்கள் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்று ஒபாமா அறிவித்தார். அதன்படி பத்திரிக்கை துறையைச் சேர்ந்த 8 பெண் நிருபர்கள் ஒபாமாவிடம் கேள்வி கேட்க அழைக்கப்பட்டனர்.
அந்த 8 பேர் கேட்ட கேள்விகளுக்கு தான் ஒபாமா பதில் அளித்தார். வழக்கமாக ஒபாமா பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் முதல் வரிசையில் ஆண் டிவி நிருபர்கள் தான் அமர்ந்திருப்பார்கள்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பிறகு வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில்,
அமெரிக்க அதிபரை பேட்டி காணும் கடின வேலையை எத்தனை பெண்கள் மேற்கொள்கிறார்களை என்பதை எடுத்துரைக்கவே இந்த ஏற்பாடு என்றார்.
ஒபாமாவின் இந்த செயலை பெண் பத்திரிக்கையாளர்கள் பாராட்டியுள்ளனர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முடிந்து ஒபாமா கிளம்பியபோது அங்கிருந்த ஆண் நிருபர் ஒருவர் புத்தாண்டு உறுதிமொழிகள் பற்றி அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு ஒபாமா அவருக்கு பதில் அளிக்காமல் ஏப்ரல் ரயன் என்ற பெண் நிருபரை கேள்வி கேட்குமாறு கூறினார் என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.