ராகுல் ஸ்டைலில் அரசியலில் இருந்து 'குட்டி பிரேக்' எடுக்கும் பிலாவல் பூட்டோ
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ இரண்டு ஆண்டுகள் அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோவுக்கும் அவரது தந்தையும், முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரிக்கும் இடையே கட்சி விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாடு சென்ற பிலாவல் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி பாகிஸ்தானில் நடந்த அவரது தாயும், முன்னாள் பிரதமருமான பெனாசீர் பூட்டோவின் நினைவுநாள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூட நாடு திரும்பவில்லை.
இந்நிலையில் பிலாவல் ஆறு மாதங்கள் கழித்து நாடு திரும்ப உள்ளார். வரும் 4ம் தேதி பாகிஸ்தானில் நடக்க உள்ள தனது தாத்தாவும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனருமான ஜுல்பிகர் அலி பூட்டோவின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிலாவல் வருகிறார்.
பிலாவல் அரசியலில் இருந்து 2 ஆண்டுகள் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் பட்டம் படிக்கப் போவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தான் பிலாவல் பெனாசீர் பூட்டோவின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர். தந்தை, மகன் இடையே கட்சி விவகாரங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பிரச்சனை எதுவும் இல்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தன்னை கட்சி விவகாரங்களில் சர்தாரி சுதந்திரமாக செயல்படவிடுவது இல்லை என்பதால் பிலாவலுக்கு அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம்.