பின்லேடன் உடலை கடலில் வீசவில்லையாம்.. அமெரிக்காவில் வைத்து எரித்து விட்டதாக புதிய தகவல்!
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்படவில்லை என்றும் அவரது உடலை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அங்கு ரகசிய இடத்தில் வைத்து எரித்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மே 1ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை, அமெரிக்கக் கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் அதிகாலையில் வீடு புகுந்து அதிரடியாக தாக்கி சுட்டு வீழ்த்தினர். பின்னர் பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
ஆனாலும் பின்லேடனின் உடல் எங்கே போனது என்பதில் சர்ச்சை நீடித்து வந்தது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உளவு ஆய்வு நிறுவனம் ஒன்றின் இமெயில் பின் லேடன் குறித்த புதிய தகவலை வெளிப்படுத்துவதாக உள்ளது. அந்த மெயிலில், அபோதாபாத் சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்லேடனின் உடலை அமெரிக்க சீல் படையினர் தாங்கள் வந்த விமானத்திலேயே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று விட்டனர். அங்கு ஒரு ரகசிய இடத்தில் வைத்து பின்லேடனின் உடல் எரியூட்டப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிராட்பார் என்ற இந்த உளவு ஆய்வு நிறுவனத்தின் இமெயில்களை அனானிமஸ் என்ற ஹேக்கர் குழு ஹேக் செய்து இந்தத் தகவலை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஸ்டிராட்ஸ்பார் நிறுவனத்திற்க நிழல் சிஐஏ என்ற பெயரும் உண்டு.
ஸ்டிராட்பார் நிறுவனத்தின் 20.7 லட்சம் இமெயில்களையும், முக்கியத் தகவல் பரிமாற்றங்களையும் தாங்கள் ஹேக் செய்து எடுத்துள்ளதாக கடந்த வாரம் இந்த அனானிமஸ் குழு தகவல் வெளியிட்டிருந்தது. அதிலிருந்துதான் பின்லேடனின் உடல் குறித்த புதிய தகவலையும் இந்த அனானிமஸ் வெளியிட்டுள்ளது.
முன்னதாக அபோபாதாபாத் சம்பவத்திற்குப் பின்னர் அமெரிக்க அரசு பின்லேடன் உடலை இஸ்லாமிய முறைப்படி கடலில் அடக்கம் செய்து விட்டதாக கூறியிருந்தது. ஆனால் இந்த ஹேக்கர் குழு கூறும் தகவல் முற்றிலும் மாறாக உள்ளது.
ஸ்டிராட்பார் துணைத் தலைவர் பிரெட் பர்டன் இதுகுறித்து அனுப்பியுள்ள ஒரு மெயிலில், பின்லேடன் உடல் டோவருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிஐஏ விமானத்தில் இது போயுள்ளது. மேரிலான்ட்டில் உள்ள ராணுவப் படையினருக்கான கழகததிற்கு அது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த கழகத்தில்தான் பின்லேடன் உடல் எரிக்கப்பட்டதாம். இந்த கழகத்தை 2011ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியுடன் அமெரிக்க அரசு மூடி விட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.