ஈவு இரக்கமின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 150 முஸ்லீம்களை கொன்ற போக்கோஹரம் தீவிரவாதிகள்
போர்னோ: வடக்கு நைஜீரியாவில் உள்ள 3 கிராமங்களுக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் மசூதிகளில் தொழுது கொண்டிருந்த ஆண்கள், குழந்தைகள் மற்றும் வீடுகளில் சமையல் செய்த பெண்கள் என 150 முஸ்லீம்களை கொலை செய்துள்ளனர்.
போக்கோ ஹரம் தீவிரவாதிகள் வடக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தில் இருக்கும் 3 கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள மசூதிகளில் தொழுது கொண்டிருந்த ஆண்கள், குழந்தைகளை கொலை செய்தனர். மேலும் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண்களையும் கொலை செய்து வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 150 முஸ்லீம்கள் பலியாகியுள்ளனர்.
இருப்பதிலேயே குகாவா கிராமத்தில் தான் அதிகமானோர் பலியாகியுள்ளனர். குகாவா கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 97 பேர் பலியாகினர்.
நோன்பு திறந்துவிட்டு மஹ்ரிப் தொழுகை தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களைத் தான் தீவிரவாதிகள் குறி வைத்து தாக்கி கொலை செய்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த கோலோ என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குகாவா கிராமத்தைச் சேர்ந்த அரபி ஆசிரியர் மலாமி அப்துல் கரீம் கூறுகையில்,
தீவிரவாதிகள் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொன்றுள்ளனர். அவர்கள் தங்கள் தந்தைகளுடன் மசூதியில் தொழுது கொண்டிருந்த 4 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளைக் கூட சுட்டுக் கொலை செய்தனர் என்றனர்.
தீவிரவாதிகள் 3 கிராமங்களில் பலரை கொன்றதுடன் 2 கிராமங்களை தீ வைத்து எரித்துவிட்டனர்.