நடு வானில் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... அவசரமாக தரை இறக்கம்
ரியோ டி ஜெனிரோ: நடு வானில் பறந்துகொண்டிருந்த பிரேசில் நாட்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-32W ரக சேர்ந்த விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில் மேட்ரிட் நகரில் இருந்து சாவ் பாலோவுக்கு புறப்பட்டுச் சென்றது. நடு வானில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளுக்கு மர்ம நபர்களிடம் இருந்து தகவல் வந்தது. அப்போது, விமானம் மொராக்கோ நாட்டின் காஸாபிளாங்கா நகரை நெருங்கிக் கொண்டிருந்தது.
சுமார் ஒன்றரை மணி நேரம் தொலைவைக் கடந்த அந்த விமானத்தை உடனடியாக மேட்ரிட் நகருக்கு திரும்பிவரும்படி விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து,அந்த விமானம் மேட்ரிட் நகரில் தரையிறக்கப்பட்டது. பயணிகளை உடனடியாக கிழே இறக்கிய பின்னர் விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.