அதிபர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு.. பிரேசிலில் மக்கள் கொந்தளிப்பு!
ரியோ டெ ஜெனரோ(பிரேசில்): பிரேசில் நாட்டு அதிபர் மைக்கேல் டெமெர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தான் குற்றவாளி இல்லை என்பதை நிருபிப்பேன் பதவி விலகமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் தலைநகர் ரியோ டெ ஜெனரோவில் அதிபர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். போலீசார் அவர்களை வளையத்திற்குள் கொண்டு வந்து பிறபகுதிகளுடன் தொடர்பை துண்டித்தனர்.
இரவிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்னும் மக்கள் போராட்டக் களத்தில் இருந்து வருகின்றனர்.
2014ம் ஆண்டு பெட்ரோபாஸ் என்ற அரசு பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட ஊழல் பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் சபாநாயகரான எட்வர்டோ குன்கா ஆவார்.
சிறையில் உள்ள குன்காவுக்கு பணம் கொடுத்து, அவரது வாயை அடைக்க முயன்றதாக தற்போது அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிபருக்கும் குன்காவுக்கும் இடையே அரசு அதிகாரிகள் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
குன்கா உண்மையான தகவல்களை தெரிவித்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பதற்காக, அவர் பேசாமல் இருப்பதற்காக இந்த பேரம் நடைபெற்றதாம்.
உண்மையை வெளிவரவிடாமல் தடுக்க லஞ்சம் கொடுக்க முன்வந்தார் அதிபர் என்று மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
76 வயது நிரம்பிய அதிபர் மைக்கேல் டெமர், தான் எந்த குற்றமும் இழைக்க வில்லை. மக்கள் முன் நிரபராதி என்று நிருபிப்பேன். பதவி விலகமாட்டேன் என்று உடும்புப் பிடியாக இருக்கிறார்.
-இர தினகர்