பிரேசிலில் 16 வயது சிறுமி 30 பேரால் பலாத்காரம்- வீடியோ வெளியிட்டு கொடூரம்
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் 16 வயது சிறுமியை 30 பேர் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள சேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை தனது காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது காதலர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அவருக்கு அளித்துள்ளார்.
குளிர்பானத்தை குடித்து மயங்கிய சிறுமி கண் விழித்தபோது வேறு ஒரு வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டார். அவரை சுற்றி 30 ஆண்கள் இருந்தனர். அவர்கள் சிறுமியை ஈவு இரக்கமின்றி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதில் சுயநினைவை இழந்த சிறுமி நேற்று தான் கண்விழித்தார். கண் விழித்தபோது அவர் நிர்வாணமாக, உடலில் காயங்களுடன் இருந்தார். இதையடுத்து அவர் ஒருவகையாக தெம்பை வரவழைத்துக் கொண்டு தட்டுத் தடுமாறி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே அந்த காமக்கொடூரன்கள் சிறுமியை பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இது குறித்து அறிந்த ட்விட்டர் நிர்வாகம் வீடியோ வெளியிடப்பட்ட கணக்கை முடக்கியது.
அந்த கொடூர வீடியோவை சிறுமியின் குடும்பத்தார் பார்த்து கதறி அழுதுள்ளனர். மேலும் பிரேசிலில் உள்ள தாய்மார்கள் வீடியோவை பார்த்து தங்கள் மகள்களின் பாதுகாப்பை நினைத்து பதறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.