குளவி விஷத்தில் இருந்து புற்று நோய்க்கு மருந்து... பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பிரேசிலியா: பிரேசில் நாட்டு காடுகளில் வாழும் மஞ்சள் நிறம் கொண்ட குளவிகளின் விஷத்தைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரேசில் நாட்டு காடுகளில் மஞ்சள் நிறம் கொண்ட ஒரு வகை விஷ குளவிகள் வாழ்கின்றன. இவை, தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக கொடுக்கில் விஷத்தைக் கொண்டுள்ளன.
இந்த விஷத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது புற்றுநோய் இருக்கும் பகுதிகளில் இந்த குளவியின் விஷத்தைச் செலுத்தினால், புற்றுநோய் செல்கள் வேகமாக அழிந்து போவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த விஷத்தால் மற்ற செல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பால் பீல்ஸ் கூறுகையில், "புற்றுநோய்க்கு மருத்துகளை எடுத்துக்கொள்வதோடு, குளவியின் விஷத்தையும் செலுத்தினால் எளிதில் புற்றுநோயிலிருந்து மீண்டு விடலாம். குளவியின் விஷம் நோய் இருக்கும் செல்களில் மட்டுமே வேலையைக் காட்டுகிறது. நோயற்ற செல்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிப்பதில்லை என்பது முக்கியமானது'' என்கிறார்.
இன்னும் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு குளவி விஷத்தை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.