433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்களை செல்லாதவையாக அறிவித்தது இங்கிலாந்து அரசு
433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
லண்டன்: 433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஆனால் பழைய நாணயங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி இரவு திடீரென அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார். அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து இன்று வரை பணத்தட்டுப்பாடு சீரானதாக தெரியவில்லை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அரசு எதிர்பார்த்தது நடந்ததோ இல்லையோ, ஆனால் மக்கள் எதிர்பார்க்காத பல்வேறு இன்னல்களை தற்போது வரை நடந்தேறி வருவது வேதனைக்குரியது. 50 நாட்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்றெல்லாம் கூறினார்கள். தற்போது வரை வங்கிக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் மக்கள் படையெடுத்த வண்ணம் தான் இருக்கின்றனர். அதிலும் கிராமப்புற மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தினமும் வங்கி வாசலில் கால்கடுக்க நின்று பணத்தை எடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்திலும் போலி நாணயங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க, தற்போது புழக்கத்தில் உள்ள 433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் நம்ம நாடு மாதிரி அடிதடியா அறிவிப்பை வெளியிட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை இங்கிலாந்து.
புதிய நாணயங்கள் வரும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பழைய நாணயங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தற்போது 1.3 பில்லியன் மதிப்பிலான நாணயங்கள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. இதில் 433 மில்லியன் மதிப்பில், 1 பவுண்ட் நாணயங்கள் அடக்கம். இவற்றில் போலி நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே பழைய ஒரு பவுண்ட் நாணயங்களுக்கு பதிலாக புதிய ஒரு பவுண்ட் நாணயங்களை வெளியிடவுள்ளது முடிவு செய்துள்ளது இங்கிலாந்து அரசு. தற்போது பிரிட்டனில் புழக்கத்தில் இருக்கும் பழைய 1 பவுண்ட் நாணயங்கள், 1983-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.