“ராணி... மகாராணி... சம்பளம் பத்தலை ராணி... “
லண்டன்: கூடுதல் ஊதியம் கோரி இங்கிலாந்து ராணியின் அரண்மனை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் பழமை வாய்ந்த அரண்மனைகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள வின்ட்சார் அரண்மனை. இந்த அரண்மனையைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
இந்த அரண்மனையில் சுமார் 120க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப் பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஊதியம் தற்போதைய வாழ்க்கை முறைக்கு பற்றவில்லை என்றும், பணிச்சுமையை குறைக்கவும் வலியுறுத்தி விரைவில் இந்த அரண்மை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்போராட்டத்திற்கு அரண்மனை ஊழியர்களில் சுமார் 84 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மாத இறுதியில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த ஊழியர்கள் திட்டமிட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தி்ன் 60 ஆண்டு கால வாழக்கையில் எதிர்கொள்ளும் முதலாவது அரண்மனை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.