மைக்கேல் ஜாக்சனின் 'செல்லம்' வரைந்த ஓவியங்கள்.. கண்டுகளிக்கும் பார்வையாளர்கள்!
மைக்கேல் ஜாக்சனின் செல்ல மனிதக்குரங்கு வரைந்த ஓவியங்கள் அமெரிக்காவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மியாமி: மைக்கேல் ஜாக்சனின் செல்ல மனிதக்குரங்கு வரைந்த ஓவியங்கள் அமெரிக்காவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாப் இசை உலகின் முடிசூடா மன்னாக திகழ்ந்தவர் மைக்கெல் ஜாக்சன். இரண்டு முறை திருமணம் செய்த இவருக்கு எந்த திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை.
செல்லப்பிராணிகள் மீது அதிக ஆர்வம் கொண்ட மைக்கேல் ஜாக்ஸன், பாம்பு, எலி, மனிதகுரங்கு போன்றவற்றை செல்லமாக வளர்த்துவந்தார். பெரும்பாலான நேரங்களை அவற்றுடனே செலவழித்து வந்தார்.
மனிதக்குரங்கின் ஓவியங்கள்
இந்நிலையில் மைக்கேல் ஜாக்ஸன் வளர்த்து வந்த பப்புள்ஸ் என்ற மனிதக் குரங்கு மனிதர்களைப் போன்றே தூரிகையைப் பிடித்து, பல்வேறு வண்ண ஓவியங்களை அழகாகத் தீட்டியுள்ளது. பப்புள்ஸ் வரைந்த ஓவியங்களை கொண்டு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
புகைப்படங்களும் காட்சிக்கு..
அதன்படி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் பப்புள்ஸ் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பப்புள்ஸ் மைக்கேல் ஜாக்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
வாங்கிச் செல்லும் ரசிகர்கள்
இந்த கண்காட்சி நேற்று தொடங்கியது. இதைப் பார்த்த ரசிகர்கள், ஆர்வத்துடன் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு மணிநேரத்தில் 2000 டாலர்
ஒரு மணி நேரத்துக்குள் 2000 டாலர்கள் வரை இந்த ஓவியங்கள் விலைபோயுள்ளன. இந்தக் கண்காட்சி மூலம் பெறப்படும் பணம் வீடு இல்லாத உயிரினங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.