வங்காளதேசத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலி
டாக்கா: வங்காளதேசத்தில் நேற்று இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வங்காள தேசத்தில் நடோர் மாவட்டத்தில் டாக்கா-ராஜ்சாஹி நெடுஞ்சாலையில் நமோர் அருகே பாரைக்ராம் என்ற இடத்தில் எதிரெதிரே வந்த இரண்டு பேருந்துகள் எதிர்பாராத விதமான ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பேருந்துகளில் பயணம் செய்த 32 பேர் பலியானார்கள். மேலும், காயமடைந்த 30 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பேருந்து விபத்துக்களில் சிக்கி வங்காளதேசத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.