கடலில் மூழ்கி பிஞ்சுக் குழந்தை பலியான விவகாரம்... தஞ்சமளிக்க மறுத்த கனடா இப்போது அரவணைக்கும் அவலம்
வான்கூவர் : துருக்கியில் கடலில் படகு கவிழ்ந்து பலிளான குழந்தை அய்லானின் தந்தை முதலில் கனடாவிடம் அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் இதற்கு கனடா அரசு அனுமதி மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால், கனடா அரசுக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடலில் மூழ்கி பலியான குழந்தை அய்லானின் தந்தை முதலில் கனடாவிடம் அடைக்கலம் கேட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகிஉள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொபானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், 5 வயதான மூத்த மகன் காலிப், 3 வயதான இளைய மகன் அய்லான் ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். ஆனால் இதற்கு கனடா மறுத்துவிட்டது.
இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.
துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் கள்ளப் படகில் பயணம் செய்வதற்காக இந்திய மதிப்பில் 3.5 லட்சம் ரூபாயை அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்லா குர்தி தனது மனைவி குழந்தைகளை ராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது. அதுவும் பிஞ்சுக் குழந்தை ஐலான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே உலுக்கிவிட்டது.
முதலில் அப்துல்லா குர்திக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த கனடா அரசு, தற்போது ஐலானின் மரணக் காட்சியைப் பார்த்தும், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கும் பதறிப்போய் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்துள்ளது. ஆனால், அப்துல்லா குர்தி கனடாவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
அப்துல்லா குர்தி பேசுகையில், எனது மனைவிதான் இந்த உலகம். அவள் இல்லாமல் எதுவுமே கிடையாது. மனைவியும், குழந்தைகளும் என் கைகளில் இருந்தபோதே மரணத்தை தழுவி விட்டனர். தற்போது, எனது இளைய மகன் இறந்த புகைப்படக் காட்சியை பார்த்து எனக்கு அடைக்கலம் தருவதாக கனடா அரசாங்கம் கூறுகிறது. இதை நான் ஏற்கப் போவதில்லை.
எனது குடும்பத்தையே இழந்துவிட்டேன். இனி நான் கனடா சென்று வாழ்வதால் எதுவும் ஆகிவிடாது. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன். நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில் குதிப்பேன் என்று கூறிஉள்ளார்.
இதனிடையே, அய்லான் இறந்த புகைப்படக் காட்சி கனடா நாட்டில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ள நிலையில், அங்கு அடுத்த மாதம் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
குழந்தை இறந்த விவகாரத்தில் கனடாவில் பழமைவாத கட்சியின் அரசு ஆட்டம் கண்டு இருக்கிறது. இப்பிரச்சினையால் ஆளும்கட்சி தேர்தலில் தோல்வியை சந்திக்கும் நிலையும் உருவாகி உள்ளது.
அகதிகள் பிரச்சினையில் இதுவரை அலட்சியம் காட்டி வந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தற்போது, எங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட துயரத்தைப் போல இதைக் கருதுகிறோம் என்றும், அகதிகள் பிரச்சினைக்கு எங்களால் முடிந்தவரை உதவி செய்வோம் என்வும் இறங்கி வந்துள்ளார்.