இங்கே ஜல்லிக்கட்டுக்கு தடை … அங்கே பொங்கலைப் போற்றிப் புகழும் கனடா பிரதமர்!
ஆடவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துக்களை வீடியோ வடிவில் பேசி கூறியுள்ளார்.
வணக்கம் என்று தமிழில் ஆரம்பித்து பின்னர் ஆங்கிலத்திலும் ஃப்ரெஞ்ச் மொழியிலும் பேசுகிறார்.
"அடுத்த சில நாட்கள் கனடாவிலும் உலகெங்கும் தமிழர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். 2016ம் ஆண்டு கனடா பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன், ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதம் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொருவரும் கனடியன் தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய நாடு வலிமையானதாகவும் பொருளாதார பலமிக்கதாகவும் இருப்பதற்கு கனடியன் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது.
இது கனடா நாடு உருவான 150 வது ஆண்டாகும். பல்வேறு கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கு சிறந்த ஆண்டாகவும் அமைகிறது.அது நமது நாட்டை அனைவரும் வசிக்கத்தக்க அருமையான ஒன்றாக்கிறது., அறுவடை திருவிழாவான தைப்பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைய, நானும் என் மனைவி ஸோஃபியும் மற்றும் குடும்பத்தினரும் வாழ்த்துகிறோம்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் முன்னதாக நடைபெற்ற தமிழர் விழாவில் சிலம்பாட்டக் குழுவினருடன் சேர்ந்து கம்பு சுற்றி ஆடியது குறிப்பிடத்தக்கதாகும்.. பிரதமரின் பொங்கல் வாழ்த்துக்கு பிறகு அந்த பழைய படம் சமூக வலைத் தளங்களில் வைராலக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 45 வயதே நிரம்பிய ஜஸ்டின் ட்ருடோ பிரதமராக பதவியேற்றார். ஜஸ்டினின் தந்தை பியர் ட்ரூடோவும் கனடாவின் பிரதமராக இருந்தவர். 2000வது ஆண்டில் அவர் இறந்த போது ஜஸ்டின் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆசிரியராக மற்றும் வழக்கறிஞராக பணியாற்றிய ஜஸ்டின் தந்தை இறந்த எட்டு ஆண்டுகள் கழித்து அரசியலில் இறங்கினார். அடுத்த எட்டாவது ஆண்டில் கனடாவின் பிரதமரும் ஆகிவிட்டார்.
-இர தினகர்