கூரை மீது ஏறி போக்கிமானைத் தேடிய இளைஞர்கள்... கோபத்தில் டுமீல் விட்ட பெண். கனடாவில் களேபரம்!
ஒட்டாவா: வீட்டுக் கூரையின் மீது ஏறி போக்கிமான் கோ விளையாடிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கனடாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் தற்போது பரபரப்பாக விளையாடப் பட்டு வரும் வீடியோ கேம் தான் போக்கிமான் கோ. செல்போன் மூலம் நிஜ உலகில் போக்கிமானைத் தேடி ஓடும் இந்த விளையாட்டு வயது வித்தியாசமின்றி அனைவரும் விளையாடி வருகின்றனர்.
பொதுஇடங்களில் பலர் திடீரென போக்கிமானைத் தேடி ஓடுவதால் பரபரப்பு ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
போக்கிமானைத் தேடி...
இந்நிலையில், கனடாவில் சிலர் போக்கிமானைத் தேடி தெருத்தெருவாக ஓடியுள்ளனர். அதோடு வீடொன்றில் மேற்பகுதியிலும் ஏறி தேடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு...
திடீரென வீட்டுக் கூரையில் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியுற்று வெளியே வந்த அவ்வீட்டின் உரிமையாளரான பெண், போக்கிமானைத் தேடித் தான் இவ்வாறு செய்துள்ளனர் என அறிந்து ஆத்திரமடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து, போக்கிமான் கோ விளையாடிய நபர்கள் மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போலீசில் புகார்...
அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தார் போலீசில் புகார் அளித்தனர்.
கைது...
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘போக்கிமான் கோ என்ற பெயரில், பலரும் தனது வீட்டின் கூரை மீது ஏறி ஓடியதால், ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுட்டதாக' தெரிவித்துள்ளார்.
கவலை...
போக்கிமான் கோ விளையாட்டால் இன்னும் என்னென்ன விபரீதங்களை மக்கள் சந்திக்கப் போகிறார்களோ என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.