லியு சியாபோ இறுதிச்சடங்கு.. நோபல் பரிசுக் கமிட்டி தலைவருக்கே விசா கொடுக்க மறுத்த சீனா
மரணம் அடைந்த சீன எழுத்தாளர் லியு சியாபோவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க விரும்பிய நோபல் பரிசுக் கமிட்டித் தலைவர் பெரிட் ரீய்ஸ் ஆண்டர்சன் விசாவுக்கு சீன அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளது.
ஆம்ஸ்டர்டாம்: சீனாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் லியு சியாபோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, நோபல் பரிசுக் கமிட்டித் தலைவர் பெரிட் ரீய்ஸ் ஆண்டர்சன் விசாவுக்கு சீன அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளது.
சீன எழுத்தாளர் லியு சியாபோ, 'சார்ட்டெர்' என்ற புத்தகத்தை எழுதினார். அதற்கு சீன அரசு தடை விதித்தோடு மட்டுமில்லாமல், லியு சியாபோவுக்கு சிறை தண்டனையும் வழங்கியது.
சிறையில் இருந்த சியாபோவுக்கு ஈரல் புற்றுநோய் தாக்கியது. அவர் வெளிநாடு மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் பார்க்கக் கோரியும் சீன அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சியாபோவுக்கு நோய் முற்றியதால், ஷென்யாங் நகரத்தில் சீன அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நோய் முற்றி அவர் நேற்று காலமானதாக சீன அரசு தெரிவித்தது. அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்க நோபல் பரிசுக் கமிட்டித் தலைவர் பெரிட் ரீய்ஸ் ஆண்டர்சன் விரும்பினார். இதற்காக சீன தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்தார். ஆனால், தூதரக அதிகாரிகள் 'சீனாவில் யாருடைய அழைப்பின் பேரில் செல்கிறீர்கள்?' என்ற தகவல் இல்லாததால் அவருடைய விசாவுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.