சீனாவில் அதிகரிக்கும் வேட்டை– தந்தத்திற்காக 1 லட்சம் யானைகள் படுகொலை
நைரோபி: சீனாவில் சட்ட விரோத தந்தங்கள் விற்பனை காரணமாக, யானைகள் கொலை அதிகரித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து கென்ய தலைநகர் நைரோபியில் யானைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆஸ்பினால் அறக்கட்டளை இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு லட்சம் யானைகள் கொலை:
அதில், "சீனாவின் நிறைய கடைகளில் தந்த விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த தந்தத்திற்காக 2010ம் ஆண்டிலிருந்து 2012 வரை 1,00,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
மூன்று மடங்கு உயர்வு:
மேலும் தற்போது சீனாவில் தந்தத்துக்கான தேவை வானளாவ உயர்ந்துள்ளது. தந்தத்துக்கான விலை 2010 ஆம் ஆண்டு இருந்ததை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
தேவை அதிகரிப்பு:
எனவே, இந்த வர்த்தகம் எண்ணற்ற யானைகளைக் கொன்றுள்ளது. மருத்துவம், கௌரவம் போன்ற காரணங்களுக்காக காண்டாமிருகக் கொம்பு, யானைத் தந்தத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக் கணக்கீடு:
இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் உலகின் பெரும் தந்த விற்பனை மையமான சீனாவின் தந்தம் விற்கும் கடைகளிலும், தொழிற்சாலைகளிலும் விலை மற்றும் விற்பனையைக் கணக்கிட்டனர்.
தந்த விற்பனை மும்முரம்:
இந்த அமைப்பு உரிமம் இல்லாத கடைகளில் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் தந்த விற்பனை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.