சீனாவால் வந்த முட்டுக் கட்டை முடிவுக்கு வந்தது! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான்!!
காத்மாண்டு: சார்க் அமைப்புக்குள் ஊடுருவ சீனா முயற்சித்ததன் விளைவாக ஏற்பட்ட இறுக்கம் முடிவுக்கு வந்துள்ளது. சார்க் நாடுகளிடையே எரிசக்தி பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் கையெழுத்திட்டது.
சார்க் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு, பூட்டான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் நீண்டகால உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். பின்னர் 2007ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், தென்கொரியா, மொரிசீயஸ், மியன்மார் ஆகிய நாடுகள் பார்வையாளர்கள் என்ற தகுதியை சார்க் அமைப்பில் பெற்றிருந்தன. அதுவும் சீனாவுக்கு கூட 2006ஆம் ஆண்டுதான் பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் கடந்த 20 ஆண்டுகாலத்தில் சீனா மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் துறைமுகங்கள், மின்நிலையங்கள் அமைத்து தமது செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டது சீனா.
இதனால் சார்க் அமைப்புக்குள்ளும் மூக்கை நுழைத்துக் கொண்டு தெற்காசியாவில் இந்தியாவுக்கு போட்டியாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ள சீனா முயற்சித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று சார்க் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது பார்வையாளர் என்ற அந்தஸ்தில் இருக்கும் சீனா, தென்கொரியாவை அடுத்த நிலைக்கு அங்கீகரித்து சார்க் அமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது.
இதற்கு இலங்கை, மாலத்தீவு நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் இதனை இந்தியா முற்று முழுதாக நிராகரித்தது.
இதனால் பாகிஸ்தான் கடும் அதிருப்தியடைந்தது. பாகிஸ்தான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சார்க் நாடுகளிடையேயான சாலை வழி போக்குவரத்து, மின்பகிர்வு போன்றவை தொடர்பான 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இப்படி சீனாவின் தலையீட்டால் தெற்காசிய நாடுகளுக்கான தனித்துவமான கூட்டமைப்பான சார்க் அமைப்பில் ஒரு தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சார்க் மாநாட்டின் இறுதி நாளான இன்று உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையேயான கருத்து வேறுபாடுகளை களைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் சார்க் நாடுகளிடையேயான எரிசக்தி பகிர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டது.
அத்துடன் சார்க் அமைப்பின் அடுத்த மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்றும் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிவித்தார்.