பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 3,000 கி.மீ 'சூப்பர் ஹைவே' அமைக்கும் சீனா!
இஸ்லாமாபாத்: அரபிக் கடலில் உள்ள பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை எளிதாக சென்றடையும் வகையில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு 'சூப்பர் ஹைவே' அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனா அதிபர் ஜின்பிங் கையெழுத்திட்டுள்ளார்.
சீனா அதிபர் ஸி ஜின்பிங் அரசுமுறை பயணமாக பாகிஸ்தானுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதிபர் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக நேற்று அவர் பாகிஸ்தான் சென்றார். அத்துடன் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவின் அதிபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக சென்றுள்ளார்.
இஸ்லாமாபத்தில் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனையும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் ஜின்பிங் நேற்று தனித்தனியாக சந்தித்து பேசினார். மம்னூன் ஹூசைன் மதிய விருந்து அளித்தும் உபசரித்தார்.
இதைத் தொடர்ந்து ஜின்பிங்கும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இரு நாடுகளின் நட்புறவு வலுப்படுத்துவது குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையில் நவாஸ் ஷெரீப், ஜின்பிங்கிற்கும், அவருடன் வந்த உயர்மட்டக் குழுவினருக்கும் பிரதமர் இல்லத்தில் சிறப்பு விருந்து அளித்தார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் மிக உயரிய விருதான நிஷான் இ-பாகிஸ்தான் விருது ஜின்பிங்கிற்கு வழங்கப்பட்டது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை ஈரான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் துறைமுகமான கவ்தாருடன் இணைப்பதற்காக 46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 'சூப்பர்ஹைவே' திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் சீனா அதிபர் ஜின்பிங் இன்று கையெழுத்திட்டார்.
இந்த சூப்பர் ஹைவேயானாது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இஸ்லாமாபாத், லாகூர், வழியாக கவ்தாரை சென்றடைகிறது. இந்தியாவை சுற்றிய நாடுகளில் தமது கடற்படையை நிறுத்தி வைக்கும் வகையில் ''முத்துமாலை'' திட்டத்தை சீனா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அமைக்கவுள்ள சாலையின் வரைபடம் காண (http://www.bbc.com/news/world-asia-32377088)
இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகள், வங்கக் கடலில் இலங்கை மற்றும் வங்கதேசங்களில் கடற்படையை நிறுத்தி வைத்துள்ளது சீனா. இதன் ஒரு பகுதியாக அரபிக் கடலில் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீரமைத்து தம் வசம் வைத்திருக்கிறது சீனா. இந்த கவ்தார் ஈரான் எல்லையை ஒட்டியுள்ளது. இந்த துறைமுகத்தை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தங்களது நாட்டுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பை அந்நாடு வழங்கி வந்தது.
தற்போது கவ்தாரை தரைவழியாகவே ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சீனாவுடன் இணைப்பதற்கான இந்த சூப்பர் ஹைவே திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் கச்சா எண்ணெய் போன்றவற்றை எளிதாக ஜின்ஜியாங் போன்ற எல்லை மாகாணங்களுக்கு சீனா கொண்டு சேர்த்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.