எரியும் பனிக்கட்டி.. சீனாவில் புதிய எரிபொருள் கண்டுபிடிப்பு- யாருக்கு உரிமை என நாடுகளுக்கிடையே சண்டை
சீனாவில், எரியும் பனிக்கட்டி வடிவில் புதிய எரிபொருள் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்: உலகம் முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவை அதிகளவில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் கையிருப்பு, இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்குள் தீர்ந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் ஆய்வுப் பணிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளும், மாற்று எரிபொருளை தயாரிப்பதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.
இந்நிலையில், எரியும் பனிக்கட்டி வடிவில் புதிய எரிபொருளை கண்டறிந்துள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடலுக்கு அடியில் மேற்கொண்ட துரப்பண பணிகளின்போது, இந்த எரியும் பனிக்கட்டியை கண்டுபிடித்ததாகவும், இது உலகின் எரிபொருள் தேவைக்கு தகுந்த தீனியாக அமையும் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
இதுபற்றி சீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'மீத்தேன் ஹைட்ரேட் கடலுக்கு அடியில் மிகவும் உறைந்த வெப்பநிலையில், எரியும் ஐஸ்கட்டியாக படிந்துள்ளது. இதனைப் பிரித்தெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். இதனை பார்க்க, பனிக்கட்டி போலத்தான் இருக்கும். ஆனால், இவை எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவை. தீக்குச்சி அல்லது லைட்டர் என எதைப் பயன்படுத்தியும் இந்த ஹைட்ரேட்டுகளை எரிய வைக்கலாம்.
இதனை தனியாகப் பிரித்தெடுத்து, எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இதுவரையிலும் உலகில் கிடைக்கவில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன. தற்போது, சீனாவின் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலமாக, உலக மக்கள் அனைவருக்கும் மாற்று எரிபொருள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதேசமயம், குறிப்பிட்ட பனிக்கட்டி வடிவிலான எரிபொருள் தென்சீனக் கடல் பகுதியில்தான் கிடைக்கப் பெறுகிறது. இந்த கடல் பகுதிக்கு, உரிமை கோரி, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிடையே மோதல் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.