சீன பல்கலைக்கழகத்தில் தவறு செய்யும் மாணவர்களுக்கு விசித்திர தண்டனை
மத்திய சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவ மாணவிகளை தண்டிக்கும் விதமாக, அவர்களை எதிர்பாலினத்தவர்களின் தூங்குமிடங்களை துப்புரவு செய்ய உத்தரவிடப்படுவதாக கூறப்படுகிறது.
உஹான் சர்வதேச கலாசார பல்கலைக்கழகத்தில், தங்களின் வகுப்புகளை புறக்கணித்து சோம்பேறியாக இருக்கும் முதலாம் ஆண்டு படிக்கும் பேஷன் கல்வி மாணவர்களுக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவதாக கல்லூரியின் ஆலோசகர் குய் போவன், சூட்டியன் மெட்ரோபாலிஸ் தினசரி நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ''மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணிக்க விரும்பினால், அவர்களின் நண்பர்கள் பல்கலைக்கழகத்தின் இந்த விதிமுறையை அவர்களுக்கு நினைவுப்படுத்துவார்கள்'' என்று குறிப்பிட்டார்.
இது வரை 3 மாணவர்கள் இந்த புதிய சட்டவிதியால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்கள் உறங்குவதற்காக தொடர்ந்து தங்கள் வகுப்பறையை புறக்கணித்து வருவது தெரியவந்தவுடன், தரைகளை பெருக்கி துப்பரவு செய்தல், நாற்காலிகளை சுத்தம் செய்தல் மற்றும் சக மாணவிகளின் கழிப்பறையை சுத்தம் செய்தல் போன்ற தண்டனைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மாணவர்களிடையே குறிப்பிட்ட அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவியான சூன் ஹரோன், சூட்டியன் மெட்ரோபாலிஸ் நாளிதழிடம் தெரிவிக்கையில், ''எதிர்காலத்தில் நான் வகுப்பறையை தவிர்க்க மாட்டேன். துர்நாற்றம் வீசும் மாணவர்களின் கழிப்பறையை கழுவ நான் 'விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.
தங்களின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகள் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் சிந்தித்து முடிவெடுத்தனரா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்வகையான தண்டனை அளிக்கப்படுவது, பெண்கள் தங்குமிடத்துக்கு ஆண்கள் செல்வதற்கு தூண்டுகோலாக அமையும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. சில மாணவர்கள் இவ்வாறான நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அடுத்த ஆண்டில், அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ள உஹான் பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளதால், தவறு செய்பவர்கள் எதிர்பாலினத்தவர்களின் கழிப்பறையை துப்புரவு செய்ய வேண்டும் என்ற தண்டனை மாணவிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமையும் என்ற கருத்து வெளிப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
குடியேறிகள் முகாமில் வழங்கப்பட்ட உணவால் பலர் பாதிப்பு: உணவில் நச்சுத்தன்மையா?
வீடியோவில் இருப்பது நான்தான்; குரல் என்னுடையதல்ல: சரவணன்
ஒமான் வழியாக கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார்
'செளதி அரசர் ஷா சல்மானின் மனதில் கத்தார் மக்களுக்கு இடம் உண்டு'