சங்கிலியால் கட்டி.. நாயை விட்டு மிரட்டி.. மலத்துவாரம் வழியே... சிஐஏவின் சித்ரவதைகள் அம்பலம்!!
வாஷிங்டன்: கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. தீவிரவாத சந்தேக நபர்களின் மலத் துவாரம் வழியே நீர், உணவு திணித்து மிக குரூரமாகவும் கொடூரமாகவும் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி தகர்த்தது. இதன் பின்னர் அல்கொய்தா இயக்கத்தினர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்களை கைது செய்து கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் சிஐஏ அடைத்தது.
அங்கு அல்கொய்தா இயக்கம் குறித்தும் அதன் எதிர்கால தாக்குதல் திட்டங்கள் குறித்தும் தகவல்களைப் பெறுவதற்காக சிஐஏ அமைப்பானது மிக மோசமான சித்திரவதைகளை கையாண்டது அவ்வப்போது சர்ச்சையாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சிஐஏவின் இந்த சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்காவின் செனட் புலனாய்வுக் குழு தற்போது சுமார் 500 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெயின்ஸ்டைன் கருத்து
இக்குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டார். அப்போது, அமெரிக்க அரசின் மீது படிந்த கறையை நீக்க இந்த அறிக்கை உதவாதுதான். .ஆனாலும் அமெரிக்க மக்களுக்கும் உலகுக்கும் நாம் எங்கே தவறு செய்திருக்கிறோம் என்பதை இது உணர்த்தும். நம்முடைய தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளும் தருணம் இது என்றார்.
மிகக் கொடுமையான விசாரணை
அதில் சிஐஏ கடைபிடித்த விசாரணை முறைகள் மிகக் கொடுமையானது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிஐஏ எத்தகைய விசாரணை முறைகளை கையாண்டது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
நிர்வாணப்படுத்தி தாக்குதல்
விசாரணை கைதிகளை மாதக் கணக்கில் தூங்கவிடாமல் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
குறுகிய சங்கிலி
குறுகிய சங்கிலி ஒன்றின் மீது நிற்க வைத்து பல மணிநேரம் குனிந்தே நிற்கும் படி செய்தும் உள்ளனர்.
மலத் துவாரம் வழி. சித்தரவதை..
பல கைதிகளை சங்கிலிகளால் கட்டிப் போட்டு மலத் துவாரம் வழியே நீர் மற்றும் உணவை செலுத்தி மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்துள்ளனர். இதில் ஒரு விசாரணைக் கைதி மரணமடைந்தும் போயுள்ளார்.
நிர்வாணப் படுத்தி..
இப்படி கைதிகளை சங்கிலிகளால் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு உருப்படியான தகவலையும் பெறவும் இல்லை.
நாய்களை குரைக்க விட்டு..
நாய்களை காது அருகே குரைக்க விடுவது, பாடல்களை மிக அதிக சப்தமாக பாடவிடுவது என மிக மோசமான வழிமுறைகளை சிஐஏ கையாண்டிருக்கிறது.
யாருக்கும் தகவல் இல்லை
இந்த சித்திரவதைகள் மூலமாக என்ன தகவல்கள் கிடைத்தன என்பது குறித்து அதிபருக்கோ நீதித்துறைக்கோ சிஐஏ எந்த ஒரு சரியான தகவலையும் கூட தெரிவிக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிஐஏ மறுப்பு
ஆனால் சிஐஏவின் இயக்குநர் ஜான் ப்ரென்னன், தாங்கள் கடைபிடித்த விசாரணை முறை சரியானதே... விசாரணை கைதிகளிடம் இருந்து தேவையான தகவல்களைப் பெற்றோம் என்று கூறியுள்ளார்.
ஒபாமா கருத்து
அதிபர் ஒபாமாவோ, சிஐஏவின் இந்த சித்திரவதை நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.
அமெரிக்காவின் அச்சம்..
இந்த அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் தீவிரவாதிகளும் பதிலடியாக தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள அமெரிக்கர்களை இதே பாணியில் சித்திரவதை செய்யலாம்.. அல்லது புதிய தாக்குதல்களை நடத்தலாம் என்றும் அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.