130 ஆண்டுகளில் இந்த ஆண்டு “தீயாய் வேலை செய்யும்” சூரியன்!
லண்டன்: கடந்த 130 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் வெயிலின் அளவு மிக மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்னர் வெயில் அளவைக் கணக்கிடும் வெப்பமானி கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அளவீட்டின் படி, 21ம் நூற்றாண்டில் தான் கடும் வெயில் கொளுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச அளவில் இந்த ஆண்டு வெயிலின் அளவு குறித்து பருவநிலை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கடந்த 5 ஆண்டுகளில்தான் அதிக அளவு வெயில் பதிவாகி வெப்பம் தாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெயில்...
அதாவது 2010, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருந்துள்ளதாகவும், குறிப்பாக இந்த ஆண்டு தான் மிக கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பருவமழை மாற்றம்...
பருவநிலை மாற்றமே அதிக வெயிலுக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உலகம் வெப்பமயமாதல் நின்று விட்டதாக கூறப்படும் கருத்து பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம்...
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் பரவலாகத் தான் உள்ளது. அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தாலும், வெயில் நீடித்தே வருகிறது.
பலி...
இந்தாண்டு கத்தரி வெயிலுக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.