நமக்குள் போரிடாமல், வறுமைக்கு எதிராக போர் தொடுப்போம்: சார்க் மாநாட்டில் நவாஸ் ஷெரிப் பேச்சு
காத்மாண்டு: வறுமைக்கு எதிராக சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து போர் தொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் சார்க் உச்சி மாநாட்டில் பேசினார்.
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் 18வது உச்சி மாநாடு நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கியது. அதில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உச்சி மாநாட்டில் இன்று நவாஸ் ஷெரிப் பேசியதாவது: வெற்றிகரமாக சார்க் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதற்காக நேபாள அரசுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். சார்க் நாடுகளுக்கு பாகிஸ்தான் மக்களின் வாழ்த்துக்களை சுமந்து நான் வந்துள்ளேன். அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரி வெற்றி கிடைக்கும் வகையிலான விவாத கருவை இந்த மாநாடு தேர்ந்தெடுத்துள்ளது.
தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து, நமது பொது பிரச்சினையான கல்வி, பெண்கள் மேம்பாடு, சுகாதாரம் ஆகிய பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். தேசங்களுக்கு இடையேயான இணைப்பை பலப்படுத்துவதன் மூலம் நமது வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும்.
சண்டை, சச்சரவு இல்லாத தெற்காசியா என்பதுதான் எனது குறிக்கோள். நாம் ஒருவருக்கொருவர் போரிடுவதை நிறுத்திக் கொண்டு வறுமைக்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டும். தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒருங்கிணைந்து செல்வதையே பாகிஸ்தான் விரும்புகிறது. இவ்வாறு ஷெரிப் பேசினார்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய 6வது ஆண்டு இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் தனது உரையில் தீவிரவாதம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் இருப்பதால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்காத பாகிஸ்தான், தெற்காசிய பிராந்தியத்தில் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புவதாக சார்க் மாநாட்டில் அறிவித்துள்ளது.