கை நிறைய, பை நிறைய "காண்டம்" வாங்கிக்கலாம்... ஆனா டிவி கிடையாது... இது ரியோ "அக்கப்போரு"!
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக உலகமே தயாராகி வருகிறது. ரியோவில் வீரர், வீராங்கனைகளும் தங்கும் ஒலிம்பிக் கிராமும் கூட தயாராகி விட்டது.
இந்தக் கிராமத்தில் எல்லா வசதிகளும் சப்ஜாடாக செய்யப்பட்டுள்ளதாம். குறிப்பாக ஆணுறைக்குப் பஞ்சமே இருக்காதாம். எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமாம். ஆனால் இந்தக் கிராமத்தில் டிவி வசதி இல்லை என்பதுதான் மிகப் பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. ஒலிம்பிக் கிராமத்திலும் கடைசிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.
45,000 ஆணுறைகள்
ஒலிம்பிக் கிராமத்தில் கிட்டத்தட்ட 45,000 ஆணுறைகள் வீரர்கள், வீராங்கனைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்படவுள்ளதாம். இதுதான் முக்கியப் பரபரப்பாக மாறியுள்ளது.
சகல வசதிகளும்
எந்த நேரம் போய்க் கேட்டாலும் ஆணுறைகளைக் கொடுக்கும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதாம். தென் அமெரிக்காவில் நடைபெறவுள்ள முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் மிகப் பெரிய அளவில் பிரேசில் அரசும், அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சிலும் ஏற்பாடுகளை பக்கவாக செய்துள்ளன.
31 தங்கும் பிளாக்குகள்
ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 31 பிளாக்குகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு 18,000 பேரை தங்க வைக்க முடியும். ஒரு கட்டடத்திலிருந்து இன்னொரு கட்டடத்திற்குப் போக பாலம் கட்டப்பட்டுள்ளது. பசுமையுடன் கூடியதாக இவை அமைக்கப்பட்டுள்ளன.
மீடியாவுக்காக திறப்பு
கடந்த வாரம் இந்த கிராமத்தை சர்வதேச ஊடகங்களுக்காக திறந்து விட்டனர். சர்வதேச பத்திரிகையாளர்கள் இந்த கிராமத்தைச் சுற்றி வந்து அதில் உள்ள வசதிகள் குறித்து எழுதி வருகின்றனர்.
மிகப் பெரிய ஹோட்டல்
இங்கு ஒரு மிகப் பெரிய ஹோட்டலைக் கட்டியுள்ளனர். இந்த ஹோட்டல் பரந்து விரிந்து காணப்படுகிறது. 5, ஏர்பஸ் ஏ 380 விமானங்களை நிறுத்தக் கூடிய அளவுக்கு இந்த ஹோட்டல் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
210 டன் உணவு
இங்கு தினசரி 210 டன் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படவுள்ளது. ஒரே நேரத்தில் 7000 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய அளவுக்கு இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 24 முதல்
இந்தக் கிராமத்திற்கு ஜூலை 24ம் தேதி முதல் வீரர்கள், வீராங்கனைகள் வருகை தரவுள்ளனர். ஒவ்வொரு நாட்டுக் கொடியும் அங்கு பறக்க விடப்படும். ஒவ்வொரு நாட்டு அணியும் வரும்போது அந்தக் கிராமத்தின் மையராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கூடைப்பந்து சாம்பியன் ஜேனத் அர்கெய்ன் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பார்.
13,000 ஊழியர்கள்
ஒலிம்பிக் கிராமத்தில் பல்வேறு பணிகளைப் பார்த்துக் கொள்வதற்காக 13,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிராமத்திலேயே தங்கி வீரர் வீராங்கனைகளுக்கு உதவுவர்.
பெட்ரூம்
மொத்தம் 3604 வீடுகள் இங்கு உள்ளன. இவை 2, 3 மற்றும் 4 படுக்கை வசதி கொண்ட வீடுகள் ஆகும். அனைத்து அறைகளிலும் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
கொசுத் தொல்லை
ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், கொசுக் கடியிலிருந்து வீரர்கள், வீராங்கனைகளைக் காக்க சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவாம். ஒவ்வொரு அறையிலும் மின்சார கொசுவர்த்திச் சுருள் பொருத்தப்பட்டுள்ளதாம்.
டிவி கிடையாது
பட்ஜெட் நெருக்கடி காரணமாக ஒவ்வொரு அறையிலும் டிவி வைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டனர். இருப்பினும் ஒவ்வொரு நாட்டு அணிக்கும் தனித் தனியாக வெளியில் ஸ்கிரீன் வைத்துள்ளனராம். அதில்தான் மொத்தமாக போய் உட்கார்ந்து பார்க்க வேண்டும்.
19,000 படுக்கைகள்
2 மீட்டர் நீளமுடைய 19,000 படுக்கைகள் வீரர்கள், வீராங்கனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படுகைகளை 30 சென்டிமீட்டர் வரை நீட்சிப்படுத்திக் கொள்ள முடியும்.
சாமி கும்பிடும் வசதி
பல்வேறு மதத்தவர்களும் இருப்பார்கள் என்பதால் அதற்கேற்ற வழிபாட்டு இடங்ங்களும் இங்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். உலகில் உள்ள முக்கியமான மதங்களின் வழிபாடுகளுக்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
இஸ்லாமியர்களுக்கு தனி அறைகள்
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித் தனியாக அறைகள் இங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். போட்டி முடிவடைந்ததும் இங்குள்ள வீடுகளை விற்று விடுவார்கள்.