”உனக்கு எங்கேயோ மச்சமிருக்குப்பா” – 2வது முறையும் லாட்டரியில் 9 கோடி வென்ற தம்பதி
லண்டன்: இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளில் லாட்டரி குலுக்கலில் இரண்டாவது முறையாக ரூபாய் 9.8 கோடி பரிசு பெற்ற பிரிட்டனின் மச்சக்கார தம்பதியர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர்.
இங்கிலாந்தின் வடக்கு லிங்கன்ஷையர் பகுதியை சேர்ந்த முன்னாள் லாரி டிரைவர் டேவிட் லாங் என்பவர்.
அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு லாட்டரி பரிசுச் சீட்டை வாங்கியிருந்தார்.
A British couple won the lottery for the second time in 2 years (!!) http://t.co/tuihoKhGri pic.twitter.com/1MF9nIWIgj
— Mashable (@mashable) April 1, 2015
தவறுதலாக குப்பையில் போட்டவர்:
குலுக்கல் நடந்து முடிவுகள் வெளியானபோது அவற்றை ஒழுங்காக சரிபார்க்க தவறிய டேவிட் லாங், அவர் வாங்கிய சீட்டுக்கு வெறும் 2 டாலர் 70 பென்னிகள் மட்டுமே பரிசு கிடைத்ததாக எண்ணி அதை கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு தனது வழக்கமான வேலையை பார்க்க தொடங்கினார்.
அம்மாடி 9 கோடி:
பின்னர், குப்பை தொட்டியில் தூக்கி வீசிய தனது பரிசு சீட்டுக்கு 10 லட்சம் பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 9.8 கோடி ரூபாய் பரிசாக கிடைத்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த சீட்டினை தேடி கண்டுபிடித்து பரிசுத் தொகையை பெற்று கொண்டார்.
புது மனைவியும், குடித்தனமும்:
கோடீஸ்வராகி விட்ட டேவிட்டுக்கு பரிசு தொகையுடன் சேர்ந்து கேத்தலின் என்பவர் புது மனைவியாக வந்து வாய்த்தார். லாரி ஓட்டும் தொழிலுக்கு விடை கொடுத்து விட்டு கேத்தலினுடன் வாழ்ந்துவந்த டேவிட், லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்துக்கு மட்டும் விடை கொடுக்க மறுத்து விட்டார்.
குருட்டு நம்பிக்கையா, அதிர்ஷ்டமா?:
என்றாவது ஒருநாள், மீண்டும் அதிர்ஷ்டம் வந்து தன் வீட்டு வாசற்கதவை தட்டும் என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
மீண்டும் 9 கோடி ரூபாய் பரிசு:
டேவிட் வாழ்க்கையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை அவரை மேலும் பல படிகள் உயரத்துக்கு தூக்கிச் சென்றது. கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற அதிர்ஷ்ட குலுக்கலில் அவர் வாங்கிய பரிசு சீட்டுக்கு மீண்டும் இந்திய மதிப்புக்கு சுமார் 9.8 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கூலாக பேசும் தம்பதி:
இவ்வளவு பெரிய பரிசு தொகை ஒருமுறை கிடைத்தாலே சிலர் ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போவதுண்டு, ஆனால், இரண்டாவது முறையாகவும் லாட்டரியில் பரிசு வென்ற டேவிட்-கேத்தலின் லாங் தம்பதியர் இது நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்று கூலாக கூறுகின்றனர். இந்த பரிசு தொகைக்கான காசோலையை அந்த தம்பதியர் பெற்றுக் கொண்டனர்.