66 பேருடன் கடலில் விழுந்த எகிப்து விமானம் பெரிய விண்கல் மோதி வெடித்ததா?
பாரீஸ்: மெடிடெரேனியன் கடலில் விழுந்த எகிப்து ஏர் விமானம் மீது விண்கற்கள் விழுந்து வெடித்துச் சிதறியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 18ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 66 பேருடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற எகிப்து ஏர் விமானம் மெடிடெரேனியன் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து மெடிடெரேனியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் 10 ஆயிரம் டன் எடை கொண்ட விண் கல் ஒன்று மணிக்கு 67 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்கு வந்துள்ளது.
அந்த விண் கல் வெடித்துச் சிதறி பல துண்டுகளாக கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை பூமியின் பல்வேறு இடங்களில் விழுந்துள்ளது. அந்த விண் கற்களில் ஒன்று எகிப்து ஏர் விமானம் மீது பட்டு விமானம் வெடித்துச் சிதறியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விமானம் நடுவானில் பறக்கையில் வெடித்துச் சிதறியதாக முன்பு செய்திகள் வெளியாகின. விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.