தாவூத் இப்ராஹிம் பணபரிமாற்றத்திற்கு உதவிய பாக். நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை!
வாஷிங்டன்: பாகிஸ்தானை சேர்ந்த கனானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடை விதித்திருப்பது தாவூத் இப்ராஹிம் குழுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கனானி பண பரிமாற்று நிறுவனம், தீவிரவாதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச்செயல் புரிவோருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகத்தின்பேரில், அதன் மீது தடை விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் துபாயிலும் செயல்பட்டு வருகிறது.
இந்த தடை காரணமாக, அந்த நிறுவனத்தின் பணி பரிமாற்றங்களை அமெரிக்காவில் நடத்த முடியாது. அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
தாவூத் இப்ராஹிம் குழு பண பரிமாற்றம் செய்யும் அமைப்பில் கனானி முக்கியமானது என்பதால் இந்தியா, இந்த தடையை வரவேற்றுள்ளது.
சமீபகாலமாக தாவூத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்குள், தாவூத்தின் பரிவர்த்தனையை முடக்கும் செயல்களில் ஈடுபட்டதோடு, பன்னாட்டு உதவியையும் இந்தியா நாடியிருந்தது.