நிழல் உலக தாதா தாவூத் பற்றி உலா வரும் மர்ம தகவல்கள்!
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றியும், உடல் கோளாறுகள், மரணம் பற்றியும் பல தகவல்கள் உலா வருகின்றன.
கராச்சி: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அவரது வாழ்க்கையைப் போலவே அவரது மரணத்திலும் மர்மங்கள் உலா வருகின்றன. அவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக செய்திகள் வெளியானாலும், அது வதந்தி என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
கடந்த 1980களில் மும்பையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த தாவூத் இப்ராஹிம் அதற்கு பங்கம் வந்ததை அடுத்து இந்தியாவிலிருந்து துபாய்க்கு தப்பி சென்றார். அங்கு அவ் பல்வேறு திரைத்துறை நிகழ்ச்சிகளிலும், கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகமாக பார்க்க முடிந்தது.
இந்நிலையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். நாட்டையே அச்சுறுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்த தாவூத் துபாயிலிருந்து மும்பைக்கு வந்ததாகவும், குண்டு வெடிப்புக்கு நிதியுதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
சொகுசு வாழ்க்கை
குண்டுவெடிப்புக்கு பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. கராச்சியில் 6,000 சதுர அடி கொண்ட மிக பிரம்மாண்டமான வீட்டில் அவர் வசித்து வருவதாகவும் தெரிகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இந்திய அரசு பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டது. எனினும் அவர் அங்கு இல்லை என்றே கூறிவருகிறது.
போதை கடத்தல் சாம்ராஜ்யம்
அவர் பாகிஸ்தானில் வசித்து வருவதற்கான அத்தனை ஆதாரங்களையும், அங்கு அவர் போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி வருவதாகவும் இந்தியா தரப்பில் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்த போதிலும் அவர் பாகிஸ்தானில் இருப்பதை அந்த நாடு ஒப்புக் கொள்ள மறுக்கிறது.
உலா வரும் மர்மங்கள்
இந்நிலையில் 61 வயதான அவருக்கு இந்த வாரத் தொடக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் அவரது உயிரிழந்துவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் அவர் உயிரோடுதான் உள்ளார் என்று தாவூத் தரப்பு கூறுகிறது.
உயிரோடு இருக்க வாய்ப்பில்லை
இதுகுறித்து உளவுத்துறையில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரது காலில் தோல் அழுகல் நோய் ஏற்பட்டதால் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான நிலையில் இருந்தது. எனவே அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று தெரிவித்தன.
மர்ம வாழ்க்கை
மும்பையில் பாலிவுட் பட உலகையே ஆட்டி வைத்த தாவூத் இப்ராஹிம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிழலான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். அவரது வாழ்க்கையைப் போலவே அவரது உடல்நிலைப் பற்றியும் மரணம் பற்றியும் வெளியாகும் தகவல்கள் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.