இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிமின் ரூ.2,500 கோடி முதலீடு: முடக்க அமலாக்கத் துறை திட்டம்
லண்டன்: இங்கிலாந்தின் கென்ட் நகரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்துள்ளதை அமலாக்கத்துறை (Enforcement Directorate) கண்டுபிடித்துள்ளது.
தாவூத் இப்ராஹம் இங்கிலாந்தில் அந்த ஹோட்டல் தவிர பல்வேறு முதலீடுகள் தெய்துள்ளது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து தவிர துருக்கி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் தாவூத் முதலீடு செய்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
தாவூத் இப்ராஹிமின் நிதி நிலைமை மோசமாகும்படி செய்தால் தான் அவரை நிலைகுலைய வைக்க முடியும். தாவூத் செய்துள்ள முதலீடு குறித்து கூடுதல் தகவல் அளிக்குமாறு அமலாக்கத் துறை இங்கிலாந்து, துருக்கி மற்றும் மொராக்கோவில் உள்ள அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்த தாவூதின் சொத்துக்களை முடக்கியது போன்று இந்த சொத்துக்களையும் முடக்குவோம் என அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தாவூத் முதலீடு செய்ய முக்கிய மூளையாக இருப்பது இக்பார் மிர்ச்சி தான். இங்கிலாந்தில் நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் உதவியோடு தாவூத் முதலீட்டு விவகாரங்களுக்கு மிர்ச்சி உதவியது தெரிய வந்துள்ளது.
தாவூத் இங்கிலாந்தில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு முதலீடு செய்துள்ளார் என்று அமலாக்கத்துறைச் சேர்ந்த அதிகாரி ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
அமலாக்க இயக்குனரகத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு விரைவில் இங்கிலாந்து, துருக்கி, மொராக்கோ சென்று தாவூதின் முதலீடுகள் குறித்து மேலும் விசாரணை நடத்த உள்ளது. தாவூதின் முதலீடு விவகாரத்தில் உளவுத் துறை, இந்திய போலீஸ் மற்றும் சிபிஐ ஆகியோரின் உதவி கோரப்பட உள்ளது.
தாவூத் துபாயில் ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தை விட அவர் துபாயில் தான் அதிகம் முதலீடு செய்துள்ளார் என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து துபாய்க்கு செய்யப்பட்ட செல்போன் காலை ஒட்டு கேட்டதில் தாவூத் துபாயில் பெரிய அளவில் முதலீடு செய்யவிருப்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.