ரியல் எஸ்டேட் புரோக்கராம் தாவூத்.. பாகிஸ்தான் விடும் லேட்டஸ்ட் பீலா!
இஸ்லாமாபாத்: உலகத்தின் கண்களுக்கு பயங்கர தீவிரவாதியாக உள்ள தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஒரு தொழிலதிபர் மற்றும் விருந்தாளி தான். அதை விட முக்கியம், அவர் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கராக லேட்டஸ்டாக அவதாரம் எடுத்துள்ளார்.
சமீபத்தில் பண பரிமாற்றம் தொடர்பாக தாவூத் இப்ராகிம் தொலைபேசியில் பேசியது உளவுத் துறைக்குத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் தாவூத்தின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆவணப்படி தாவூத்தின் மீது இதுவரை ஒரு குற்றச்சாட்டுக் கூட பதிவு செய்யப்படாததே, அந்நாடு அவரை விருந்தாளியாக பார்க்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
மிகச் சிறந்த தரகர்:
பாகிஸ்தான் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு, தன்னைப் பொறுத்தவரை தீவிரவாதத் தலைவனாக உலா வருகிறார் தாவூத். அதற்குத் தகுந்தாற்போல், போதைப் பொருள் வியாபாரத்திலிருந்து விலகி தற்போது அவர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அவர் கராச்சியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பிளாட் ஒன்றை வாங்கி அதில் வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இது தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகள் ஒன் இந்தியாவிற்கு அளித்த தகவலில், எப்போதும் பரபரப்பாக உள்ள தாவூத் தற்போது கராச்சியில் உயர்தர நிலத்தரகராக உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
எப்போதுமே கராச்சி தான்:
சமீபத்தில் தாவூத் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐஎஸ்ஐ தாவூத்தை ஆப்கானிஸ்தான் எல்லையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார். அந்த தகவல் ஏறக்குறைய உண்மை தான். ஆனால், அது ஐஎஸ்ஐயின் தந்திரங்களில் ஒன்று என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள். இதன்மூலம், இந்தியாவின் கவனத்தை ஆப்கானிஸ்தான் எல்லை பக்கம் திருப்ப வைக்க நடத்தப்பட்ட தந்திரம் என அவர்கள் கூறுகின்றனர்.
பின்னர், ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து பங்களாதேஷ் அழைத்துச் செல்லப்பட்ட தாவூத் மறுநாள் டாக்கா அழைத்து செல்லப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஆறு நாள் சுற்றுப் பயணத்திற்குப் பின் அவர் மீண்டும் கராச்சி திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கராச்சியில் ஐஎஸ்ஐ-ன் பாதுகாப்பின் கீழ் தாவூத் உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு முக்கியமானவர் தாவூத்:
பாகி்ஸ்தானுக்கு தாவூத் இப்ராகிம் மிகமுக்கியமானவர் என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் ஐஎஸ்ஐயின் முக்கிய ஏஜென்டுகளான லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளுக்கு முக்கிய நிதியுதவி செய்பராக தாவூத் இருக்கிறார். ஆனால் இன்று சர்வதேச அளவில் போதை மருந்து வர்த்தகத்தை தாவுத் நேரடியாக கவனிப்பதில்லை.
அனீஸ் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீல் ஆகியோர்தான் இதை முக்கியமகாக கையாண்டு வருகிறார்கள். அனீஷ் இப்ராகிம் நைஜீரியாவுக்குக் கூட போய் வந்துள்ளான். அங்கு போகா ஹரம் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஷேக்குவைச் சந்தித்துஇந்தியாவில் பிசினஸ் செய்வது குறித்துப் பேசியுள்ளான்.
மறுபக்கம் தாவூத் அடக்கி வாசிக்கிறார். சட்டப்பூர்வமான தொழில்களை மட்டுமே கவனித்து வருகிறார். ஒரு வேளை எதிர்காலத்தில் அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடிக்க முயற்சித்தாலோ அல்லது நெருக்குதல் கொடுத்தாலோ அவர் சட்டரீதியா தொழிலைத்தான் செய்து வருகிறார் என்று கூற காரணமாக இருக்கும் என்பதால் இந்த செட்டப்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை தாவூத் இப்ராகிம் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். தாவூத்தை காக்க வேண்டியது பாகிஸ்தானுக்கு முக்கியமானது. காரணம், இ்ந்தியா அவரைப் பிடித்து விட்டால் இத்தனை காலம் அவர் குறித்து பாகிஸ்தான் கூறி வந்த பொய்கள் அம்பலமாகி விடும்.
2வது, தாவூத் பெயரைச் சொல்லித்தான் போதைப் பொருள் கடத்தலை தாவூத் கும்பல் செய்து வருகிறது. எனவே தாவூத் மாட்டிக் கொண்டால் இந்த பிசினஸ் போய் விடும். ஐஎஸ்ஐக்கும் பணம் கிடைக்காத நிலை ஏற்படும். தாவூத் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த பிசினஸ் தற்போது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. எனவே தாவூத் பாதுகாப்பாக இருக்கும் வரை இந்த பிசினஸுக்குப் பிரச்சினை இல்லை. மேலும் அனீஸ் இப்ராகிம் வசம் அனைத்துப் பொறுப்புகளும் வரும் வரை பாகிஸ்தானுக்கு தாவூத் அவசியமானவர், முக்கியமானவர்.
பொறுத்திருப்போம்:
தாவூத் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், நாம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பலமுறை நாம் பாகிஸ்தானை கேட்டு விட்டோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொறுத்திருந்து பார்பபோம் என்று கூறியுள்ளார்.
கடந்த காலத்திலும் கூட பலமுறை தாவூத் தொடர்பான முக்கிய தொலைபேசி அழைப்புகளை இ்ந்திய உளவுத்துறை ஒட்டுக் கேட்டு அவரது இருப்பிடத்தை உறுதி செய்துள்ளது. அவர் பாகி்ஸ்தானில்தான் உள்ளார் என்பதையும் உறுதி செய்துள்ளோம். ஆனால் அதை பாகிஸ்தான் மறுத்தே வந்துள்ளது. இந்த நிலையில் தாவூத்தின் வர்த்தகக் கட்டமைப்பை சீர்குலைத்து அவனுக்கு பணம் வருவதை தடுத்து நிறுத்த வேண்டியது முக்கியமானது. இதைச் செய்து விட்டால் தாவூத்தின் முக்கியத்துவம் பாகிஸ்தானில் குறைந்து விடும். நமக்கும் வேலை சுலபமாகி விடும்.