தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பியபோது தடுத்த அத்வானி: சோட்டா சகீல் பரபரப்பு பேட்டி
கராச்சி: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்தியா திரும்புவதற்கு, அத்வானி தடை போட்டதாக தாவூத்தின் வலதுகரமான சோட்டா சகீல் தெரிவித்துள்ளார்.
1993ம் ஆண்டு, மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் பல அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதற்கு காரணமான தாவூத் இப்ராஹிம், சோட்டா சகில் போன்ற மும்பையின் நிழலுலக தாதாக்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் தாவூத்தின் வலதுகரமான சோட்டா சகீல், இந்திய ஆங்கில பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட நாங்கள் அனைவருமே மீண்டும் மும்பைக்கு திரும்ப திட்டமிட்டோம். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ராம் ஜெத்மலானியை (அப்போது, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் அமைச்சராக இருந்தார்) தாவூத்தே, லண்டனில் நேரில் சந்தித்து, இந்தியா வந்து சரணடைய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், உங்கள் அமைச்சரவை, உங்கள் அமைச்சர் அத்வானி அதற்கு தடை போட்டுவிட்டார். எனவே, நாங்கள் இப்போது இந்தியா திரும்ப தயாராக இல்லை. நாங்கள் கடந்த ஐந்தாறு வருடங்களில் யாரையுமே மும்பையில் கொலை செய்யவில்லை. சோட்டா ராஜன் ஆட்கள்தான், உ.பியில் இருந்து துப்பாக்கி சுடுபவர்களை கூட்டி வந்து அப்பாவிகளை கொன்றான்" இவ்வாறு சோட்டா சகீல் கூறியுள்ளார்.
வாஜ்பாய் அரசில் அத்வானி உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்தவர் என்பதால், இப்ராஹிமை சரணடையச் செய்ய அத்வானி ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து ராம் ஜெத்மலானி அளித்த பேட்டியில், "தாவூத்தும், சோட்டா சகீலும் சரணடைய தயாராக இருந்தனர். ஆனால், சரத்பவார் தலைமையிலான, அப்போதைய மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
மும்பை குண்டுவெடிப்புக்கு நான் காரணம் இல்லை என்று என்னை சந்தித்த போது தாவூத் கூறியிருந்தார். மூன்றாம் தரமாக விசாரிக்க மாட்டோம். கண்ணியமாக நடத்துவோம் என்று உறுதியளித்தால், நாங்கள் சரணடைய தயார் என்று தாவூத் கூறியிருந்தார். அடி உதைக்காக மட்டும் தாவூத் பயப்படவில்லை, சிறைக்குள் வைத்தே தங்கள் கதையை முடித்துவிடுவார்கள் என்று அஞ்சினார்" என்று ஜெத்மலானி கூறியுள்ளார்.