யு.எஸ். ஆய்வகத்தில் இருந்து 'பயோடெரர்' உயிர்கொல்லி பாக்டீரியா 'லீக்'
கென்டுக்கி: அமெரிக்க ஆய்வகம் ஒன்றில் இருந்து உயிர்கொல்லி பாக்டீரியா வெளியேறியுள்ளது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கென்டுக்கி மாநிலத்தில் உள்ள கோவிங்டன் நகரில் டுலேன் தேசிய குரங்குகள் ஆய்வு மையம் உள்ளது. அந்த ஆய்வு மையத்தில் பர்கோல்டெரியா சூடோமல்லெய் என்ற பாக்டீரியாவுக்கு மருந்து தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் உயிர் கொல்லியான அந்த பாக்டீரியா ஆய்வகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் வெளியேறியுள்ளது.
பாக்டீரியா உச்சகட்ட பாதுகாப்பு உள்ள ஆய்வகத்தில் இருந்து எப்படி வெளியேறியது என்று யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த பாக்டீரியா மாசுபட்ட மண் மற்றும் தண்ணீர் மூலம் மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்கும். ஆய்வு மையத்திற்கு வெளியே பாக்டீரியா இருந்ததாக தெரியவில்லை. ஆனால் ஆய்வகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த 4 குரங்குகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 குரங்குகள் கருணை கொலை செய்யப்பட்டுள்ளன.
மேலும் அந்த ஆய்வு மையத்திற்கு சென்ற பெண் ஃபெடரல் இன்ஸ்பெக்டரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலநாடுகளுக்கு சென்று வரும் அவர் ஆய்வகத்திற்கு வரும் முன்பே பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்று தெரியவில்லை.
ஆய்வக வளாகத்தில் இருந்து மண் மற்றும் நீர் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அதில் பாக்டீரியா இல்லை. அந்த பாக்டீரியா உயிரி தீவிரவாதத்துக்கான கருவியாக பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.