200 வருடங்களுக்கு முன்பு விண்கல் தாக்கி இந்தியர் பலியானதாக ஒரு தகவல்!
வாஷிங்டன்: விண்கல்லால் இதுவரை மனித உயிர் பலியானதாக தகவல் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட 200 வருடங்களுக்கு முன்பு உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு விண்கற்கள் விழுந்ததில் டைனோசர்கள் கூட்டமாக கூண்டோடு அழிந்தன. இருப்பினும் விண்கற்களால் இதுவரை மனிதர்கள் அழிந்ததாக வரலாறு இல்லை.
அதேசமயம், விண்கற்கள் மனிதர்களைப் பயமுறுத்திய வரலாறு உண்டு. சான்றுகளும் உள்ளன.
65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு..
கிட்டத்தட்ட 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் இனம் அழிந்தது. அதை அழித்தது விண்கற்கள்தான் என்று நம்பப்படுகிறது. ஒரே ஒரு விண்கல்தான் ஒட்டுமொத்த டைனோசர்களையும் அழித்ததாகவும் நம்பப்படுகிறது.
பூமியைத் தாக்கிய அதி பயங்கர விண்கற்கள்..
அதேபோல 3.9 பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதி பயங்கர விண்கற்கள் பூமியையும், நிலவையும் தாக்கியதாக நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வகம் கூறுகிறது. அதன் பிறகு அவ்வப்போது பூமியை நோக்கி விண்கற்கள் விழுவது இயல்பாக நடந்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
விண்கல் என்றால் என்ன..
வானில் உள்ள வால் நட்சத்திரமும், எறிகற்களும்தான் பூமிக்கு வரும்போது விண்கற்களாக மாறி விழுகின்றன. விண் பாறை என்றும் இதை அழைக்கலாம். பெரும்பாலான விண்கற்கள் பூமிக்குள் நுழையும் முன்பே எரிந்து சாம்பலாகி விடும். கீழே வருவது சிறிய அளவில்தான்.
கெண்டகி டூ நியூயார்க் வரை...
கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவின் கெண்டகி முதல் நியூயார்க் வரை அக்டோபர் 9ம் தேதி விண்கற்கள் சரமாரியாக பூமியை நோக்கி விழுந்ததை அமெரிக்கர்கள் பார்த்து வியந்தனர். அனைத்துமே வானிலேயே எரிந்து சாம்பலாகி விட்டன.
கார் மீது விழுந்த கல்..
இருப்பினும் நியூயார்க், பீக்ஸ்கில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மீது விண் கல் விழுந்ததில், அந்தக் கார் தகர்ந்து போனது.
மனிதர்கள் இறந்ததாக சீனாவில் ஆவணம்..
விண்கல் தாக்கி மனிதர்கள் இறந்ததாக இதுவரை உலக அளவில் எங்குமே உரிய பதி்வு இல்லை. அதேசமயம், புராதன சீன ஆவணங்களில் இதுகுறித்த தகவல் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக இவை உறுதிப்படுத்தப்படவில்லை.
1000 ஆண்டுகளில் யாரும் இறக்கவில்லை...
கடந்த 1000 ஆண்டுகளில் மனிதர்கள் யாரும் விண்கல் தாக்கி இறந்ததாக வரலாறே இல்லை என்று விஞ்ஞானிகள் அடித்துக் கூறுகிறார்கள். காயமடைந்த வரலாறு மட்டுமே உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
விண்கல் பட்டு முறிந்த இடுப்பு...
அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த ஆன் ஹாட்ஜஸ் என்ற பெண் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விண்கல் ஒன்று அவரது வீட்டின் மீது விழுந்தது. இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.
மெக்சிகோவில் விழுந்த ஓட்டை...
அதேபோல மெக்சிகோவில் விழுந்த விண்கல் ஒன்றால் அங்கு பெரும் பள்ளத்தாக்கே ஏற்பட்டது. இன்றளவும் அந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்கலாம்.
1825ல் ஒருவர் பலி...
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1825ம் ஆண்டில் இந்தியாவில் ஒருவர் விண்கல் பட்டு உயிரிழந்ததாக ஒரு தகவல் உள்ளது. இருப்பினும் இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.