கொதிக்கும் அனல் காற்று..தகிக்கும் வெப்பம்..பாகிஸ்தானில் பலி 500 ஐக் கடந்தது..
கராச்சி : சுட்டெரிக்கும் வெயில் மற்றும் உருக்கும் அனல் காற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கி கடுமையான அனல் காற்று வீசி வருகிறது.
இதனால் 2 முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக கராச்சி நகரம், சிந்து மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 45 டிகிரி செல்சியஸ் அதாவது 111 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வருகிறது.
கராச்சியில் அதிக அளவில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெயிலுக்கு முதியவர்களே அதிகம் பலியாகியுள்ளனர்.
பலருக்கும் வெப்பத்தால் ஏற்படும் காய்ச்சல், நீரிழப்பு நோய், மூச்சூத் திணறல் மற்றும் அஜீரண கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் 500-ஐ கடந்துள்ளது.
தொடர்ந்து சிந்து மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருந்தக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தவிர அந்நாட்டு ராணுவம் தரப்பில் வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன